நாடே சிரிக்கிறது.. செயலாளரும், துணை செயலாளரும் சிறையில்.. மிக்சர் சாப்பிடும் அதிமுக தலைகள்
சசிகலா, தினகரன் போன்றோரே கட்சியிலிருந்து விலக்கி வைத்துவிட்டு கட்சியை காப்பாற்ற முடியாத கையறு நிலையில்தான் இருக்கிறது அதிமுக.
சென்னை: நாடே இப்போது தமிழகத்தை பார்த்து எள்ளி நகையாடுகிறது. ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பிலுள்ள பொதுச்செயலாளர் ஊழல் வழக்கில் நாலாண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையிலும், அதற்கு அடுத்தபடியான பதவியாக கருதப்படும் துணை பொதுச்செயலாளர் பதவியில் அமர வைக்கப்பட்ட டிடிவி தினகரன், லஞ்ச வழக்கில் டெல்லி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள ஏளனப்பார்வை.
இதோ.., சில மாதங்கள் முன்புதான் அறவழியில் தங்கள் உரிமைக்கா, ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி மொத்த நாட்டையும் பெருமிதத்துடன் திரும்பி பார்க்க வைத்த தமிழகத்திற்கு இப்போது, நேர் எதிர் தலைகுனிவு.
எந்த ஒரு ஆட்சியுமே அது சார்ந்த கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை செயல்படுத்த அமைவதுதான். அந்த தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால், சிறையிலுக்கும் கட்சி தலைவர்கள் கொள்கைகளை செயல்படுத்துவதுதான் இந்த ஆட்சியின் நோக்கம். இதை கேட்பதற்கே சங்கடமாக இருக்கிறதுதானே. ஆனால் நிதர்சனம் அதுதானே.
குடும்ப அரசியல்
திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எதிரான இயக்கம் என கூறியயே கட்சி நடத்தி வந்தவர் ஜெயலலிதா. இன்று அந்த கட்சி குடும்ப அரசியலில் கரைந்து கொண்டுள்ளது. சிறையிலுள்ள ஒரு குடும்பத்தின் பேச்சை கேட்டு நடக்க வேண்டிய நிலையில்தான் ஆட்சி உள்ளது.
கட்சியிலிருந்து நீக்கவில்லை
இப்படி ஒரு மோசமான நிலையிலும், சசிகலா, தினகரன் போன்றோரே கட்சியிலிருந்து விலக்கி வைத்துவிட்டு கட்சியை காப்பாற்ற முடியாத கையறு நிலையில்தான் இருக்கிறது அதிமுக. ஓ.பன்னீர்செல்வம் அணியின், சசிகலா குடும்ப விரட்டியடிப்பு நிபந்தனையை வெளிப்படையாக ஏற்க முடியாத நிலையில் பலவீனப்பட்டு போயுள்ளது முதல்வர் எடப்பாடி அணி.
காரணம் இதுதான்
இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் சிலரிடம் கேட்டபோது, "சசிகலாதான் ஜெயலலிதா இருக்கும்போதே அனைவரிடமும் கோலோச்சியவர். கட்சியின் வரவு செலவுகளை கூட அவர்தான் கவனித்து வந்தார். அவரை சின்னம்மா என்றுதான் ஓ.பி.எஸ் உட்பட அனைத்து முக்கியஸ்தர்களும் அழைத்து பவ்யம் காட்டுவார்கள். இப்போதும் ஒரு கணிசமான எம்எல்ஏக்கள் கூட்டம் சசிகலா ஆதரவாளர்கள்தான். இதுதான் நடவடிக்கை எடுக்க எடப்பாடி கோஷ்டி அஞ்சும் காரணம்" என்கிறார்கள் விவரமாக.
பாதுகாப்பு
பதவி இருந்தால் மட்டுமே பாதுகாப்பு என்பது சசிகலா எண்ணம். இதனால்தான், பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. அந்த பதவியை கேட்டால், தனது பதவிக்கே சசிகலா ஆதரவாளர்கள் ஆப்பு வைத்துவிடுவார்களே என்ற பயம் எடப்பாடிக்கு. இதனால் இவராலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஆழம் பார்த்தனர்
இப்படி ஒரு முதுகெலும்பு இல்லாத நிலையில்தான் அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளனர். முதல்கட்டமாக தினகரன் சிறை சென்றதும், தலைமை அலுவலகத்திலுள்ள சசிகலா பேனர்களை அகற்றி, ஆழம் பார்த்துள்ளனர். ஆனால் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை சின்னம்மா பேனர்கள் அகற்றப்பட கூடாது என நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சசி ஆதரவாளர்கள் சங்கநாதம் முழங்கியதால், சப்தநாடியும் ஒடுங்கிப்போய் கிடக்கிறது ஆளும் தரப்பு.
தேர்தல் ஆணையமே கதி
இப்போது அதிமுகவினருக்கு உள்ள ஒரு வாய்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புதான். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டால், "தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டதால் சசிகலாவுக்கு பதில் வேறு ஒருவரை நியமிப்பதை தவிர வேறு வழியில்லை" என்று போலியாக பாசாங்கு செய்தபடி உள்ளுக்குள் மகிழ்வோடு தங்களவர்களில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்கலாம். சசி குடும்பத்தில் வேறு யாரும் குரல் எழுப்பாமல் பார்த்துக்கொள்ள இருக்கவே இருக்கிறது, பாஜக. இதை நோக்கிதான், குளம் வற்றட்டும், மீன் சாப்பிடலாம் என காத்திருக்கின்றனர், ஆளும் கட்சியின் மூத்த கொக்குகள் என காதை கடிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.