மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்துக்கு காரணம் என்ன? பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீவிபத்து நடைபெற காரணம் என்ன என்பது குறித்து பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீவிபத்து நடைபெற்றதற்கு அங்குள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் 50 கடைகள் எரிந்து நாசமாகின. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த தீவிபத்தின் தாக்கத்தால் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்தன. சம்பவம் நடந்த இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தரிசனத்துக்கு அனுமதி
மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தை காண அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுமக்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கிழக்கு கோபுர வாசல் மட்டும் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றார் அவர்.
பொதுமக்கள் ஏராளம்
இந்த பயங்கர தீவிபத்துக்கு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு மற்ற கடைகளுக்கு பரவியது என்று சொல்லப்பட்டாலும் பொதுமக்கள் குற்றச்சாட்டுவது ஆக்கிரமிப்புகள்தான். தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
தீத்தடுப்பு சாதனங்கள் இல்லை
அப்போது அவர்கள் கூறுகையில் இந்த தீவிபத்துக்கு முக்கிய காரணம் இங்குள்ள ஆக்கிரமிப்புகளே ஆகும். இதை அதிகாரிகள் அகற்ற வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கோயிலில் தீத்தடுப்பு சாதனங்கள் கூட இல்லாத அவல நிலை உள்ளது. நள்ளிரவு என்பதால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
இனியாவது நடவடிக்கை
இதே பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்லும் நேரங்களிலோ இங்கு விழா நடைபெறும் காலங்களிலோ இதுபோன்ற ஒரு தீவிபத்து நடந்திருந்தால் பெரும் உயிர் சேதம் நடைபெற்றிருக்கும். இனியாவது இந்த கோயிலில் தீத்தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.