'ஐ' திரைப்படம் திருநங்கைகளை அவமானப்படுத்தவில்லை: சென்சார் அதிகாரி விளக்கம்
ஐ திரைப்படத்தில் திருநங்கைகளுக்கு எதிரான காட்சியமைப்பு இருப்பதாக குற்றம்சாட்டி நடைபெறும் போராட்டங்கள் குறித்து தணிக்கை குழுவின் மண்டல அதிகாரி பக்கிரிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐ திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக ஒரு திருநங்கை நடித்துள்ளார். அவரை கதாநாயகனும், அவரது நண்பர்களும் கேலி செய்வது போன்ற காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தில் உள்ள ஒரு சிலர், திருநங்கைகளை பார்க்கும் கண்ணோட்டத்தின்படிதான் படத்தின் நாயகனும் திருநங்கையை பார்க்கிறார். கதை அமைப்பில் அப்படி ஒரு காட்சி தேவைப்படுவதால் அதை அனுமதித்தோம்.

ஐ திரைப்படத்தை பட தேர்வு கமிட்டி, ரிவைசிங் கமிட்டி மற்றும் டெல்லியிலுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு ஆணையம் ஆகிய மூன்று கமிட்டியினர் பார்த்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்யவோ, காட்சிகளை நீக்கவோ அதிகாரம் கிடையாது.
யாராவது பாதிக்கப்பட்டதாக கருதினால், அவர்கள் நீதிமன்றத்தை அனுகலாம். இவ்வாறு பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications