மீன்குழம்பு சமைக்காததை கண்டித்ததால் ஆத்திரம்... மனைவி தீக்குளிப்பு... காப்பாற்ற சென்ற கணவனும் பலி
மீன்குழம்பு சமைக்காததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவனும் தீக்கிரையாகினார்.
Recommended Video

திருச்சி: மீன் குழம்பு சமைக்காததால் கணவர் கண்டித்ததை தாள முடியாமல் மனைவி தீக்குளித்த போது அவரை காப்பாற்ற முயன்ற கணவனும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). திருச்சி குட்ஷெட் லாரி உரிமையாளர் சங்க தலைவராகவும், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் சுரேஷ் இருந்தார்.
இவருடைய மனைவி சத்யா (35). இவர்களுக்கு ராகுல் (17), உதயா(15) ஆகிய மகனும் மகளும் உள்ளனர். சுரேஷுடன் அவருடைய தாய் கஸ்தூரியும் வசித்து வருகிறார்.

மீன் வாங்கியும் குழம்பு சமைக்கவில்லை
இந்நிலையில் புதன்கிழமை காலை மீன் வாங்கி கொடுத்து விட்டு சமைத்து வைக்கும்படி கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார் சுரேஷ். இதையடுத்து மதிய உணவுக்காக மாலை வீட்டுக்கு சாப்பிட வந்தார் சுரேஷ். அப்போது மீன் குழம்பு சமைக்காமல் வேறு குழம்பு வைத்திருந்தார் சத்யா. இதனால் சத்யாவை சுரேஷ் கண்டித்துள்ளார்.

வாக்குவாதம்
அதற்கு சத்யா, வாஷிங் மெஷின் கோளாறு ஏற்பட்டுவிட்டதால் துணிகளை கையால் தோய்த்து போட்டு வர நேரம் ஆகிவிட்டதால் மீன் குழம்பு வைக்கவில்லை என்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றியபடி வீட்டின் அறைக்கு ஓடி சென்று உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் சத்யா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த சுரேசும், அவரது தாய் கஸ்தூரியும் அதிர்ச்சியடைந்தனர்.

கணவன் மீதும் தீ
பின்னர் சுரேஷ் ஓடி சென்று அறையின் கதவை உடைத்து கொண்டு சத்யாவை காப்பாற்ற முயன்றார். அப்போது வலி தாங்க முடியாமல் சத்யா, சுரேஷை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதில் சுரேஷ் உடலிலும் மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து சுரேஷின் தாய் கஸ்தூரி கூச்சல் இட்டதை அடுத்து அங்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை
தீக்காயம் 50 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்டதால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications