திகிலூட்டும் திங்கட்கிழமை வெயில்... இன்னைக்கு என்ன நடக்குமோ
சென்னை: திங்கட்கிழமை காலையில சுள்ளுன்னு வெயிலடித்தால் 3 மணிக்கு மேல மழை ஆரம்பிச்சு விடாம 3 நாளைக்கு கொட்டும் என்பது சென்னைவாசிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த நவம்பர் 23, நவம்பர் 30 திங்கட்கிழமைகள் இப்படித்தான் நடந்தது. இது 3வது வாரம் நேற்று இரவு வரை கனமழையும் சாரல் மழையுமாக கொட்டிய நிலையில் திங்கட்கிழமையான இன்று வானம் தெளிவாக காணப்பட்டது. இதுதான் அதீத அச்சத்தை அதிகரித்துள்ளது.
இன்று காலையில் வழக்கம்போல சூரியன் எட்டிப்பார்க்கவே சென்னைவாசிகள் நம்பிக்கையுடன் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றுள்ளனர். கடந்த இரண்டு வார திங்கட்கிழமை இரவுகளில் ஏற்பட்ட அனுபவம் கைகொடுக்க, குடையோடும், சிலரோ ரெயின்கோட் எடுத்துக்கொண்டும் அலுவலகத்திற்கு கிளம்பியுள்ளனர்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை விடாமல் கொட்டிய மழையால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மிகப்பெரிய ஏரிகள் நிரம்பி வழியவே, ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு அந்த தண்ணீருடன் மழைநீரும் கலந்து அடையாற்றில் 80000 கனஅடி நீராக பெருகியது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளை கபளீகரம் செய்யவே, இயல்வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது.

சென்னையில் சுறுசுறுப்பு
ஒருவாரம் கழித்து சென்னையில் இயல்புவாழ்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. போக்குவரத்து ஓரளவு சீரடைந்து உள்ளத்தால் மக்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஒரு வாரத்துக்கு பின் சூரிய வெளிச்சத்தை சென்னை வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கடைகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள், உணவகங்கள் செயல்படுகின்றன.

அலுவலகம் கிளம்பிய மக்கள்
ஏராளமானோர் அலுவலகத்திற்கு கிளம்ப பழுதான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் அண்ணாசாலை, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய பலரும் 10 மணிக்குத்தான் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்துள்ளனர்.

நகராத காற்றழுத்த தாழ்வு நிலை
நம்பிக்கையோடு போனவர்களுக்கு வானிலை அறிவிப்பு சற்றே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அப்படியே இருக்கிறது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு இடையே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்துள்ளார் ரமணன்.

சென்னையில் மழை இருக்கு
சென்னையில் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நல்ல மழை இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரமணன்.

ஜோதிடர்கள் எச்சரிக்கை
வாட்ஸ்அப் பீதி ஒருபுறம் இருக்க டிவியில் பேட்டி கொடுக்கும் ஜோதிடர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தில் ஜனவரி மாதம்வரை ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்கின்றனர். அதாவது நீர் ராசியில் சூரியனும், சனியும் இணைந்தால் அதிகமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சென்னைவாசிகள் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருங்கப்பு...












Click it and Unblock the Notifications