சென்னையில் ஜெயலலிதா போட்டியிடுவது உறுதி... வெற்றிவேல் விலகல் பின்னணி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுவதற்கு வசதியாக யார் தொகுதியைத் தானமாக தரப் போவது என்பது குறித்த பேச்சுக்கள் அதிகரித்து வந்த நிலையில் சென்னையில் அவர் போட்டியிடப் போவதாக வந்த செய்திகளுக்கு மத்தியில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பி.வெற்றி வேல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபால் உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்தத் தொகுதியில்தான் ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்று வந்த செய்திகள் உண்மையாகியுள்ளன.
ஜெயலலிதா இதுவரை சென்னையில் போட்டியிட்டதில்லை. தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் அவர் போட்டியிட்டுள்ளாரே தவிர சென்னை பக்கம் அவர் வந்ததே இல்லை. இந்த நிலையில் வெற்றிவேல் விலகல் மூலம் அவர் முதல் முறையாக சென்னையில் போட்டியிடப் போவது உறுதியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அன்றே அவர் எப்போது முதல்வராக மீண்டும் பதவியேற்கப் போகிறார் என்ற கேள்வி அதிமுகவினர் எழத் தொடங்கி விட்டது. ஆனால் நீதிபதி குமாரசாமி செய்த குழப்பத்தால் ஜெயலலிதா நிதானித்து செயல்படும் நிலை ஏற்பட்டு
தீர்ப்பே தப்பு என்பதாக மாறிப் போயுள்ளதால், ஜெயலலிதாவும் முதல்வர் பதவியேற்பது குறித்து அவசரம் காட்டாமல் உள்ளார். இந்த நிலையில் மே 22ம் தேதி தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதற்கு அடுத்த நாள் அவர் முதல்வராகப் பதவியேற்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஜெயலலிதா இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பலரும் தங்களது தொகுதிகளைத் தானம் தர அடித்துப் பிடித்து முன்வந்தனர். ஜெயலலிதா கடைசியாக ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தார். அங்கு அவர் பதவியை இழந்ததும் நடந்த இடைத் தேர்தலில் வளர்மதி போட்டியிட்டு, ஜெயலலிதா வாங்கிய ஓட்டுக்களை விட கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார். இப்போது இங்கு மீண்டும் இடைத் தேர்தல் வருவதை ஜெயலலிதாவே விரும்பவில்லை.
திருச்செந்தூரை அவர் குறி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதேபோல திருத்தணி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியனும் பதவி விலக விருப்பம் தெரிவித்திருந்தார். அதேபோல அணைக்கட்டு தொகுதி பாமக அதிருப்தி எம்.எல்.ஏ கலையரசு, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ, ஆகியோரும் விலக ஆர்வமாக இருந்தார்.
தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ சுந்தரராஜனும் விலக முன்வந்திருந்தார். இவர் மதுரை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். ஜெயலலிதா, கிராமப்புற தொகுதிக்கு முன்னுரிமை கொடுப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னையிலிருந்து ஒரு அதிமுக எம்.எல்.ஏ விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று சென்னை அதிமுகவினர் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.