தேமுதிகவுடன் கூட்டணி சேருவதில் எங்களுக்கு பிரச்சினையே கிடையாது.. பாமக டபுள் பல்டி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணி, மக்கள் நல கூட்டு இயக்கம் ஒரு அணி என தற்போது மூன்று அணிகள் உருவாகி விட்டன.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் பாமக-வும், தேமுதிக-வும் இடம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது சட்டசபைத் தேர்தலிலுக்கு தன்னிச்சையாக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்துள்ளது பாமக. மேலும், எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்றும் திட்டவட்டமாக பாமக அறிவித்துள்ளது.
தேமுதிகவை இழுக்க...
இன்னமும் தங்களது முடிவைத் தெரிவிக்காத தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து கட்சிகளுமே தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், தேமுதிகவை தங்களுடன் கூட்டணி அமைக்க வைக்க பாமகவும் விரும்புகிறது.
பாமகவுக்கு பாதிப்பு...
ஏனெனில், தேமுதிகவை பொறுத்தவரை பரவலாக வாக்கு வங்கி இருந்தாலும் வட மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில்தான் பாமகவும் வலுவாக உள்ளது. தேர்தலில் தேமுதிகவும், பாமகவும் எதிர்எதிர் அணியாக நின்றால் அது பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஆளும் கட்சிக்கு எதிரான அலை...
இந்நிலையில், இது தொடர்பாக பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.
தேமுதிகவுடன் கூட்டணி...
தேமுதிகவுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த லோக்சபாத் தேர்தலில் நாங்கள் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம். 2014 கூட்டணி பார்முலாப்படி மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஊழல் கட்சிகள்...
அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் திமுகவுக்கு ஆதரவாக திரும்பாது. ஏனெனில் இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டன' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.