மீண்டும் கனிமொழி புறக்கணிக்கப்படுகிறார்?.. ஆர்.கே.நகர் பிரசாரத்திற்கு அனுமதி இல்லை??
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஆனால் அவரை ஈடுபடுத்த மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. வேட்பாளர்கள் இறுதியாகி விட்டார்கள். அதிமுக உடைந்து போய் விட்டது. சுயேச்சை சின்னத்தில்தான் மது சூதனனும், தினகரனும் போட்டியிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் தீபா இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என கட்சிகள் களத்தில் இருந்தாலும் கூட திமுக தரப்பு பெரும் உற்சாகத்துடன உள்ளது.

அப்புறப்படுத்தப்பட்ட இலை
இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தலில் இல்லை. இதனால் வாக்குகள் தாறுமாறாக சிதறும் என்ற நம்பிக்கையில் திமுக தரப்பு உள்ளது. இதனால் நமக்கு வெற்றி எளிது என்பது அதன் எண்ணமாக உள்ளது.

பிரசார வியூகங்கள்
தற்போது பிரசார வியூகங்களில் பிசியாக உள்ளது திமுக. யார் யார் பிரசாரத்தில் ஈடுபடுவது, என்ன பேசி வாக்கு சேகரிப்பது, யார் யாரை ஈடுபடுத்வது என்பது குறித்து அலசி வருகின்றனராம்.

கனிமொழி விருப்பம்
தேர்தலில் பிரசாரம் செய்ய கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதற்காக சில பயணத் திட்டங்களையும் கூட அவர் வகுத்து விட்டாராம். இதுதொடர்பாக ஸ்டாலினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.

ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை
ஆனால் வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் கனிமொழியைப் பயன்படுத்த ஸ்டாலின் விரும்பவில்லையாம். இதற்கு முன்பு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த திருப்பரங்குன்றம் மற்றும் தஞ்சை, அரவக்குறிச்சி இடைத் தேர்தலிலும் கனிமொழியை, ஸ்டாலின் பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை.

இந்தத் தேர்தலிலும் அனுமதி கிடையாது
அதேபோல இந்த இடைத் தேர்தலிலும் கனிமொழியை ஈடுபடுத்தாமல் ஓரம் கட்டி வைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த முடிவால் கனிமொழி கடும் அதிருப்தியுடன் உள்ளாராம். கனிமொழியின் வேதனையை ஸ்டாலினிடம் கொண்டு சென்றுள்ளனராம். ஆனால் அவர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications