தனி ஆவர்த்தனம் ரொம்ப கஷ்டம்.. திமுகவில் ஐக்கியமாக மதேமுதிக முடிவு?
சென்னை: சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிகவை தொடங்கிய சந்திரகுமார் அணி, இனியும் தனியாக கட்சி நடத்துவது கஷ்டம் என்று கருதி திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
இந்தக் கட்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் இணைந்தனர். திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக இணைந்தால் வரவேற்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருந்தார். இதனையடுத்து சட்டசபை தேர்தலில் மக்கள் தேமுதிக திமுக உடன் கூட்டணியில் இணைந்தது.
மக்கள் தேமுதிக
சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சேகர் ஆகியோருக்கு 3 சீட் கொடுத்தது திமுக. மூவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். எப்படியும் சிட்டிங் எம்எல்ஏ பதவியை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று பகீரத முயற்சி எடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மூவருமே தோல்வியைச் சந்தித்தனர்.
ஈரோடு வாஷ் அவுட்
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் மொத்தமாக மண்ணை கவ்வியது திமுக. திராவிட இயக்கங்களுக்கு குருகுலமாக விளங்கும் ஈரோடு மாநகரின் முக்கியப் பகுதிகள், பெரியார் வீடு உள்ளிட்டவை இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது, திமுக உடன் பிறப்புகள் மத்தியில் வருத்தத்தை மட்டுமன்றி விரக்தியையும் ஏற்படுத்தியது.
ஈரோட்டில் இரு கோஷ்டி
ஈரோட்டில் திமுகவானது என்.கே.கே.பி.ராஜா அணி, அதிமுகவில் இருந்து வந்த முத்துசாமி அணி என்ற இரு கோஷ்டிகளாக இயங்கி வரும் நிலையில், சந்திரகுமாருக்கு வாய்ப்பு அளித்ததன் மூலமாக மூன்றாவது அணிக்கு தொடக்கமாக அமைந்ததோடு, அதுவே ஈரோடு திமுகவின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக மாறிவிடும் என்றும் உள்ளூர் உடன்பிறப்புகள் எச்சரித்தனர். சொன்னது போலவே நடந்தது.
சேலத்திலும் இரு அணி
மேட்டூரில் எஸ்.ஆர்.பார்த்திபன் சில சுற்றுகள் முன்னிலையில்வந்து, இறுதியாக 6200 வாக்குகளில் அதிமுக செம்மலையிடம் தோல்வியடைந்தார். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் திமுகவில் வீரபாண்டி ராஜா, வக்கீல் ராஜேந்திரன் என இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தனர். அவர்களை சரிகட்டவே பார்த்திபனுக்கு நேரம் சரியாகிப் போனது. ஆனாலும் யாருமே ஒத்துழைப்பு தரவில்லையாம்.
கட்சியை இணைக்கலாமா?
தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகுறித்து மூவரும் அலசியுள்ளனர். இதில், திமுகவுடன் இணைந்துவிடுவது குறித்து அலசப்பட்டுள்ளது. நாங்கள் தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளைத் திரட்டி சென்னையில் கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம். கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தையொட்டியே எங்கள் முடிவு இருக்கும் என்று கூறியுள்ளார் எஸ் ஆர் பார்த்தீபன்,