ஜெ.வுக்கு செருப்பைக் கழற்றி பக்தி காட்டிய உதயக்குமார்... சசிக்காக திருமங்கலத்தை தியாகம் செய்கிறார்?
முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது பக்தராக இருந்தவர் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார். செருப்புக் கூட போடாமல் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது சசிகலா பக்கம் தனது பக்தியை அவர் திருப்பியுள்ள
சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். முன்பு செருப்பு போடாமல் தலைமைச் செயலகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியவர் உதயக்குமார். இப்போது சசிகலாவை முதல்வராக்கும் முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டு தனது தொகுதியையும் அவருக்ககாக விட்டுக் கொடுத்து விட்டு முழுமையான சசிகலா பக்தராக முடிவு செய்து படு தீவிரமாக செயலாற்றி அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு பணிந்தவராக காட்டிக் கொள்ள, அவரிடம் விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள அதிமுகவினரிடையே பெரிய போட்டா போட்டியே நடக்கும். இதற்காக ஒவ்வொரு தலைவரும், நிர்வாகியும், அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் விதம் விதமாக என்னென்னவோ செய்து அசத்தி வந்தனர்.
அதில் ஒரு படி மேலே போனவர் உதயக்குமார். கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயக்குமார், அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தலைமைச் செயலகம் வந்த அவர் காலில் செருப்பு கூட போடாமல் அலுவலகத்திற்கு வந்து போனார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
ஜெ. இருக்கும் இடம் கோவில்
இதுகுறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. செய்திகளும் வெளியாகின. ஏன் செருப்பு போட மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டபோது அம்மா இருக்கும் இடம் கோவில். கோவிலுக்குள் யாராவது செருப்புப் போட்டுச் செல்வார்களா. எனவேதான் செருப்புப் போடுவதில்லை என்று வித்தியாசமாக விளக்கம் அளித்து அசரடித்தார் உதயக்குமார்.
சட்டசபை - கட்சி அலுவலகம்- கோட்டை
சொன்னபடி ஜெயலலிதா புழங்கிய இடங்களான சட்டசபை, கட்சி அலுவலகம், தலமைச் செயலகம் மற்றும் போயஸ் கார்டன் வீடு என எங்கு சென்றாலும் செருப்புப் போட மாட்டார் உதயக்குமார். செருப்புப் போடாமல்தான் வலம் வந்தார். இத்தனைக்கும் அப்போது அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.
ஜெ. விட்ட டோஸ்
ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா இதை ரசிக்கவில்லை. உதயக்குமாரின் விசுவாசத்தைக் கண்டு அவர் மகிழ்ந்தாலும் கூட, அமைச்சர் பதவிக்குரிய மரியாதையை அவர் சீர்குலைப்பதை ரசிக்கவில்லை, அனுமதிக்கவில்லை. இதனால் மீண்டும் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் உதயக்குமார்.
குறுகிய காலத்தில் பதவி பறிப்பு
அதேசமயம், அவர் அவ்வளவு பக்தி காட்டியும் கூட குறுகிய காலத்திலேயே அவரது பதவியைப் பறித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் அதிர்ச்சி அடைந்தார் உதயக்குமார். ஆனாலும் தனது விசுவாசத்தை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.
பக்தி மாற்றம்
ஆனால் இப்போது அப்படியே தனது பக்தியை சசிகலா பக்கம் மாற்றி விட்டார் உதயக்குமார். மற்ற எந்த அமைச்சர்களை விடவும், உதயக்குமார்தான் அதி தீவிர சசிகலா ஆதரவாளராக மாறியுள்ளார். சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் பகிரங்கமாக பேசியவரும் இவர்தான். இவரைப் பார்த்துத்தான் தற்போது மற்றவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர்.
தொகுதியைத் தரவும் தயார்
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார் உதயக்குமார். அங்கு 23,590 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஜெயராமைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன் பிறகு வருவாய்த்துறை அமைச்சரானார். இப்போது சசிகலாவுக்காக தனது தொகுதியைத் தியாகம் செய்ய உதயக்குமார் தயாராக இருக்கிறாராம்.
திருமங்கலம்
திருமங்கலம் தொகுதியில் சசிகலா மற்றும் உதயக்குமார் சார்ந்த முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். இதைக் கணக்கில் கொண்டுதான் திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் ஜெயிக்கலாம் என கூறி வருகிறாராம் உதயக்குமார். இதை சசிகலா தரப்பும் ரசிப்பதாக கூறுகிறார்கள். எனவே சசிகலா அனேகமாக திருமங்கலம் தொகுதியிலேயே போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் பரவி வருகிறது.
புதுப் புது உத்திகள் கண்டுபிடிக்கப்படுமா?
போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவிடம் காட்டிய பக்தியை விட பல மடங்கு பக்தியை சசிகலாவுக்குக் காட்டுவார் உதயக்குமார் என்று அதிமுக நிர்வாகிகளே பேசிக் கொள்கின்றனர். ஜெயலலிதாவைக் கவர காட்டிய வித்தைகளைப் போலவே இனிமேல் சசிகலாவைக் கவரவும் பற்பல உத்திகள் கண்டுபிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.