நினைவு சின்னமாகுமா ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் வீடு?
முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆன்லைன் மூலம் கோரிக்கை விடுத்து கையெழுத்து
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் மூலமாக கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதாநிலைய வீடு சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் மகனுக்கு சொந்தமாகப் போவதாக செய்திகள் உலா வருகின்றன.
ஆன்லைன் கோரிக்கை
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மனு சேஞ்ச்.காம் இணையதளத்தில் போடப்பட்டுள்ளது. கே. சண்முகம் என்பவர் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நேரடி வாரிசுகள் இல்லை
"மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அவர்கள், தனது தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அம்மா என்று அழைக்கப்படுபவர். தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தலைவர். ஆறு முறை தமிழகத்தின் முதல்வாக இருந்து முதல்வராகவே மறைந்தவர். அரசியலுக்கு வரும் முன்பு அவர் ஒரு பிரபல நடிகையும் ஆவர். அவருக்கு என நேரடி வாரிசுகள் யாரும் இல்லை.
தனியாருக்குப் போகக் கூடாது
இப்போது அவருடைய போயஸ் கார்டன் இல்லம் தனியார் ஒருவருக்கு செய்திகள் வெளி வருகின்றன. அவரைப் போலவே அந்த இல்லமும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். பல பெரிய அரசியல் தலைவர்கள் வந்து சென்ற இடம். அது பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி அரசால் பாதுகாக்கப்படாத அவரது அரசியல் குரு எம்ஜிஆர் அவர்களின் ராமாவரம் இல்லம் எப்படி படிப்படியாக பொலிவிழந்தது என்பதை நாம் அறிவோம்.
நினைவில்லமாக மாற்ற வேண்டும்
எனவே ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லத்தை ஒரு நினைவுச் சின்னமாக அறிவித்து காலத்திற்கும் அவருடைய தொண்டர்கள், பொதுமக்கள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக அரசு பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இதற்காக தேவைப்பட்டால் அந்த இடத்திற்கும் அம்மையாரின் பொருள்களுக்குமான மதிப்பீட்டுத் தொகையை அரசே சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில் பாதகம் ஒன்றுமில்லை. விரைந்து செயல்படாவிட்டால் ஒரு மக்கள் தலைவரின் வரலாற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கும் வாய்ப்பை இந்த மாநிலம் இழந்துவிடலாம்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து குவிகிறது
இதில் பலரும் கையெழுத்துப் போட்டு வருகின்றனர். இதுவரை 1220க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்தும் பலர் ஆர்வமாக இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.