நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி... பஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவில்லையா?
பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2.57 காரணி ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு, அரசின் எச்சரிக்கையைத் தாண்டி போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகின்றனர் தொழிற்சங்கத்தினர். நீதிமன்ற உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் ஜனவரி 8ம் தேதி தெரிவிப்போம் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் 30 மணி நேரத்தை கடந்து நீடிக்கும் போராட்டத்திற்கு அரசு சில மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதே சமயம் நிலைமையை பயன்படுத்திக் கொண்டு தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் கட்டணக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் பொதுமக்கள் அதிக காசு கொடுத்து அன்றாட பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தே சென்ற மாணவர்கள்
பொதுமக்கள் எப்படியாவது நிலைமையை சமாளித்துக் கொள்வார்கள் என்றாலும், இலவச பேருந்து பாஸ் பயன்படுத்தி பள்ளி சென்று வரும் மாணவ, மாணவிகளின் நிலைமை படு மோசம். பேருந்துக்காக காத்திருந்த பல மாணவர்கள் பல இருள் மங்கத்தொடங்கியதால் நடந்தே வீடுகளுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

திமுக ஆதரவு
இதே போன்று சென்னையில் இன்று நாள் முழுவதும் மின்சார ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மற்றொரு புறம் மற்ற நாட்களில் ஆள்நடமாட்டமே இல்லாமல் இருந்த மெட்ரோ ரயில்களை நோக்கியும் மக்கள் கூட்டம் படையெடுத்தது. தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் கோரிக்கை நியாயமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

என்ன சொல்லப்போகிறார் ரஜினி?
இந்நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கி இன்று சூப்பர் ஸ்டராக இருக்கும் ரஜினிகாந்த் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவாரா???? என்று அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் பொதுச்செயலாளர் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் ஊழியர்களுக்காக டுவீட்
இவர் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோரின் கேள்வியும் இதுவாகத் தான் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது தமிழக வருகையை உணர்த்தும் விதமாக காலையிலேயே தமிழக முதல்வர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் என்று தன் பங்கிற்கு ஒரு டுவிட்டை போட்டுள்ளார். ரஜினி என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அவர்.












Click it and Unblock the Notifications