ராஜினாமா செய்துவிட்டு கிளம்பிவிடுவேன்: புதுவை மக்களுக்கு கிரண் பேடி 4 வாரம் கெடு
புதுச்சேரி: புதுச்சேரியை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்கு கிளம்பிவிடப் போவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் பரிஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பேசுகையில்,
புதுச்சேரியில் துப்புரவு பணிக்கு நான் முக்கியத்துவம் அளித்து அவ்வப்போது பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறேன். குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று பார்த்தபோது குப்பைகள் தரம் பிரிக்காமல் கிடந்தது.
குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் அளிக்குமாறு நான் மக்களை ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன். மக்கள் யாரும் குப்பைகளை தெருக்களில் வீசக் கூடாது அதை முறைப்படி துப்புரவு பணியாளர்களிடம் அளிக்க வேண்டும்.
இதற்கு ஒத்துழைப்பு கிடைக்கிறதா என 4 வாரம் வரை பார்ப்பேன். இல்லை என்றால் நான் பதவியை விட்டுவிட்டு டெல்லிக்கு கிளம்பிவிடுவேன் என்றார்.பேசிய கையோடு அவர் பரிசுகளை வழங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.