சிறையில் மட்டுமல்ல, வெளியிலும் ஜாலியாக சுற்றிய சசிகலா.. பிரச்னையை கையில் எடுக்குமா நீதிமன்றம்?
சசிகலா சிறையில் கைதி உடையில் இல்லை, சொகுசாக வாழ்ந்தார் என்பதைத் தாண்டி, அவர் ஜாலியாக வெளியே ஷாப்பிங் சென்று வந்ததற்கான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுக்குமா
சென்னை : சிறையில் இருக்கும் குற்றவாளி பணம் படைத்தவராக இருந்தாலும் சிறை வாழ்க்கையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சசிகலா உணர்த்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுக்குமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கும் போது நீதிமன்றம் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரே ஊழல் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி சொத்து சேர்த்த சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் தண்டனையை பிப்ரவரி மாதத்தில் உறுதி செய்தது.
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் புதிய டிஐஜியாக பதவியேற்ற ரூபா சசிகலாவிற்கு சிறையில் எல்லா சலுகைகளும் அளிக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று சசிகலாவிற்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகின.

நோட்டமிடும் சசி
இதனிடையே சுடிதாரில் சசிகலா ஷாப்பிங் சென்று விட்டு பூனை போல பதுங்கி பதுங்கி நோட்டமிட்டவாறே சிறைக்குள் வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு பின்னால் வரும் அண்ணி இளவரசியை ஒதுங்கி நிற்குமாறு சசிகலா சொல்லுவதும் அந்தக்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

அதிகாரி காரிலேயே வீதிஉலா
சசிகலா சிறையில் இருந்து வெளியே செல்லும் போது புர்கா அணிந்து சென்றதாக சிறைக் கைதிகள் சிலர் கூறியுள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற அனுமதி பெற்றால் மட்டுமே சிறை தண்டனை பெற்ற சசிகலா வெளியே வர முடியும். ஆனால் சசிகலா பணத்தை கொடுத்து அதிகாரியை கையில் வைத்துக் கொண்டு, அவருடைய காரிலேயே வெளியே சென்று வந்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

கோர்ட்டையே ஏமாற்றுவதா
உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒரு குற்றவாளி இப்படி சட்டத்தை மீறி வெளியே சென்று வந்ததோடு, சிறை விதிமீறல்களும் செய்துள்ளார். சிறைத்துறை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கையால் சித்தராமையா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாமானிய கைதி என்றால் அந்தக் கைதிக்காக உறவினர்கள் எடுத்துச் செல்லும் உணவு உள்ளிட்டவற்றை தோண்டிக் கிளறும் சிறைத்துறை, சசி விஷயத்தில் மட்டும் எப்படி இப்படி செயல்பட்டுள்ளது.

சட்டம் நிலைநாட்டப்படுமா?
சிறைத்துறை நிர்வாகத்தின் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் சிறைத்துறையின் இந்த தவறான முன் உதாரணம் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளை பார்க்கும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து சுமோடோ வழக்காக இதனை எடுத்து சட்டத்தை நிலைநாட்டுமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
ஏனெனில் கைதி சிறையை விட்டு வெளியே செல்ல முடியாது என்பது விதிமுறை. வெளியே செல்ல சம்மந்தப்பட்ட கோர்ட் அனுமதிக்க வேண்டும். சசிகலா விவகாரத்தில் உச்சநீதிமன்றம்தான் அனுமதி கொடுக்க வேண்டும். எனவே சசிகலா உச்சநீதிமன்றத்தை அவமதித்துவிட்டாரா என்பதை விசாரிப்பது அவசியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications