தமிழகத்தில் விரைவில் கள் விற்பனை? வந்து விழுந்த கேள்வி! நாலே வரியில் அமைச்சர் முத்துசாமி நறுக் பதில்
சென்னை: தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி தரப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கமான ஒரு பதிலைக் கொடுத்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது டாஸ்மாக் கடைகள் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே கள் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.

இருப்பினும், பல்வேறு காரணங்களாக் கள் விற்பனைக்குத் தமிழ்நாட்டில் தடை இருக்கிறது. இதற்கிடையே கள் விற்பனை தொடர்பாக மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முத்துசாமி: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட 5ஆவது வார்டு பகுதியில் ரூ. 1.25 கோடி செலவில் அமையும் உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயம் செய்வது குறித்தும் கள் விற்பனை குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி கூறுகையில், "மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் இருக்கிறது. அது அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ கொண்டுவரப்பட்டது இல்லை. மக்கள் நலன் சார்ந்தது. மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்கள் கோரிக்கைக்குக்களை சரி செய்யவே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
யாருக்கும் பொது இடத்தில் மது அருந்த அனுமதி இல்லை.. பொது இடத்தில் மது அருந்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் சிலர் மது குடித்த குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. அதைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் இதற்குத் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு சொல்வது ஏற்புடையது இல்லை. போலீஸ் விசாரணையில் தான் உண்மை தெரிய வரும்.
மது விற்பனை இலக்கு: எப்படியாவது அதிகமாகக் குடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. தவறான வழியில் செல்லக்கூடாது. இதனால் எந்தவொரு தவறும் நடக்கக் கூடாது என்பதைச் சரி பார்க்கவே இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இது மது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. மது அருந்துவோர் அதில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கள் விற்பனை: அடுத்துக் கள் விற்பனையை அனுமதிப்பது குறித்துக் கேட்கிறார்கள். கள் விற்பனை குறித்து மிகப் பெரிய ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. கள் விற்பனை குறித்து ஒரே நாளில் எல்லாம் முடிவு எடுக்க முடியாது. இதில் உள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில், உரிய ஆய்வுக்குப் பின்னரே கள் விற்பனைக்கு அனுமதி தர முடியும்.
கடும் நடவடிக்கை: இப்போது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆதாரத்துடன் புகார் வந்தால் பணியிடை நீக்கம் மட்டுமின்றி கைது நடவடிக்கையையும் எடுக்க அரசு தயாராக உள்ளது. டாஸ்மாக்கில 25000 பேர் வேலை செய்யும் நிலையில், சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் சொல்வது தவறு..
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது 99% தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு, கடுமையான கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications