டாஸ்மாக் பார்களில் 10 மணிக்கு மேல் சரக்கு விற்றால் ஏரியா இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்? விஜய்க்கு கோரிக்கை
சென்னை: சென்னையில் சட்டவிரோத பார்களை தடுக்க தவறியதாக எழுந்த புகாரில், திருவொற்றியூர் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் முதல் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக டாஸ்மாக் அல்லது தனியார் மதுபானக்கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை தடுக்க தவறினால் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போதைப்பொருளை ஒழித்துக்கட்டவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். பதவியேற்ற மேடையிலேயே பெண்கள் பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' அமைத்து உத்தரவிட்டார். போதைப் பொருளை ஒழித்துக்கட்ட தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். இந்த 2 விஷயங்களிலும் போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பார் திறந்திருப்பதை த.வெ.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வீடியோ படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்த சட்டவிரோத பார் தொடர்பான வீடியோ சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் கவனத்திற்கு வந்தது. அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோத பார் இயங்கியது உண்மை என்பதும், அதனை திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தடுக்க தவறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுதது இன்ஸ்பெக்டர் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போன்ற போலீஸ் நிலையங்களில்தான் பணியாற்றி வந்தார். சட்டசபை தேர்தலையொட்டி அவர் வடசென்னை பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டது போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டவுடன், ஆங்காங்கே சட்டவிரோத பார்களும், சில்லரை மது விற்பனை கடைகளும் போலீசாரின் துணையோடு செயல்படத் தொடங்கும் என்ற புகார்கள் நீண்ட காலமாகவே உள்ளது.இரவு 10மணிக்கு மேல் ஒரு குவாட்டர் 250 ரூபாய் என்று எழுதப்படாதசட்டம் போல் பல பார்களில் விற்பனையாகியும் வந்தது.இதுபற்றி மக்கள் புகார் அளித்தாலும் ஓரிருநாள் நடவடிக்கை இருக்கும்.. பின்னர் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற புகாரும் உள்ளது. இந்த சூழலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த நடவடிக்கையால் சட்டவிரோத பார்களும், சில்லரை விற்பனை கடைகளும் இனிமேல் மூடப்படும் என்பத உறுதியாகி உள்ளது.
அதேநேரம் சட்டவிரோத சில்லரை மதுபான கடைகள் செயல்படுவது குறித்து கண்காணித்து அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் யாராலும் மது வாங்க முடியாத சூழ்நிலையை முதல்வர் விஜய் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக டாஸ்மாக் அல்லது தனியார் மதுபானக்கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை தடுக்க தவறினால் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்














Click it and Unblock the Notifications