மயான அமைதியில் பன்னீர் செல்வம் அரசு.. சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடராவது நடக்குமா?
சென்னை: ஏதோ அரசு முறை துக்கம் அனுஷ்டிப்பது போல உள்ளது தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே படு அமைதியாக வேலை பார்க்கின்றனர். முதல்வர் என்ற அந்தஸ்துக்கே சம்பந்தமில்லாதவர் போல ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் உள்ளன. இப்படியே ஒரு மாதத்தை ஓட்டி விட்டார் அவரும்.
தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவென்றால் வழக்கமாக நடக்கும் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்குமா, நடக்காதா என்பதுதான்.
இருக்கிற இருப்பைப் பார்த்தால் நடப்பது சந்தேகம் என்பது போலத்தான் உள்ளது.
முள் இருக்கையில்
கிட்டத்தட்ட முள் இருக்கையில் இருப்பது போலத்தான் உள்ளது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைமை. உட்காரவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை. ஒரு மாதிரியாக பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். என்று கட்சியினரால் செல்லமாக அழைக்கப்படும் பன்னீர் செல்வம்.
சிரிப்பு இல்லை - சுறுசுறுப்பு இல்லை
முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாருமே வாயார சிரித்தபடி காண முடியவில்லை. அனைவருமே ஒரு துக்கத்தை தேக்கி வைத்துக் கொண்டு, வருத்தத்துடன் பணியாற்றுவது போல உள்ளது. ஒரு அரசு நடப்பது போன்ற விறுவிறுப்பையே கோட்டை பக்கம் காண முடியவில்லை என்கிறார்கள்.
முதல்வர் அறைக்கு மூடு விழா
கம்பீரமான முதல்வராக அவர் இல்லை. தனது தலைவியின் கண்ணியமிக விசுவாசியாக மட்டுமே அவர் நடந்து கொள்கிறார். முதல்வர் அறைப் பக்கம் எட்டிக் கூட அவர் பார்ப்பதில்லை. தனது அறையில்தான் இருந்தபடி தமிழகத்தை வழி நடத்துகிறார்.
எதுவுமே இல்லை
அரசிடமிருந்து புதிய அறிவிப்புகள், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் என்று எதுவுமே அறிவிக்கப்படுவதில்லை. மாறாக அறிக்கைகள் மட்டுமே முதல்வர் பெயரில் வருகிறது. கையெழுத்து போட்டபடி அமைதியாக இருக்கிறார் பன்னீர் செல்வம்.
பெயர் போடலையா.. ரொம்பச் சந்தோஷம்!
முதல்வரின் பெயரைப் போட்டுக் கூட அறிக்கைகளை வெளியிடுவதில்லை தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை. மாறாக வெறும் முதலமைச்சர் என்று மட்டுமே போடுகின்றன. இதையும் கூட படு சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறாராம் பன்னீர் செல்வம். தன்னை யாராவது முதல்வர் என்று கூப்பிட்டு விடப் போகிறார்களே என்ற பயம்தான் அவரிடம் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
கிண்டல்கள் சுழன்றடித்தாலும்
ஜெயா டிவியில் வாய் வலிக்க வலிக்க மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்று கூப்பாடு போட்டுக் கொண்டுள்ளனர். இதை மீடியாக்களிலும், அரசியல் மட்டங்களிலும், மக்கள் மத்தியிலும் கிண்டல் செய்து குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி ஓ.பன்னீர் செல்வம் கவலைப்பட்டது போலவே தெரியவில்லை.
என்னா செஞ்சாலும் .. !
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பன்னீர் செல்வத்தை சரமாரியாக கிண்டலடிக்கிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். மனுஷன் நகரனுமே.. அமைதியாக இருக்கிறார்.
சட்டசபைக் கூட்டமாவது நடக்குமா
இந்த ஆட்சியில் அமைச்சரவைக் கூட்டம் என்பதே அரிதாகி விட்டது. வழக்கமாக நடக்கும் மாதாந்திரக் கூட்டம் கூட நடப்பதில்லை. சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடராவது நடக்குமா என்றும் தெரியவில்லை.
தங்கப்பதக்கம் சிவாஜி போல
கிட்டத்தட்ட தங்கப் பதக்கம் படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்.. என்று பாட்டுப் பாடாத குறையாக வலம் வந்தபடி இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
"அம்மா"வுக்கு நல்லவராக மட்டும் இருந்தால் போதுமா.. மக்களிடமும் "வல்லவர்" என்ற பெயர் வாங்க வேண்டாமா?