விஜயகாந்த், வாசனுக்கு வலை விரிக்கும் மக்கள் நலக்கூட்டணி? சிக்குவார்களா?
சென்னை: சட்டசபை யாருடன் கூட்டணி என்று தெளிவாக சொல்வதைப் போல, யார் யாருடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளது மக்கள் நலக் கூட்டணி. வலிமையான கூட்டணியாக உருவாக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்று கூறியுள்ள மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, தமாக, தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த கூட்டணியில் விஜயகாந்த், வாசன் இணைந்து 'டிரிபிள் வி' கூட்டணி உருவாகுமா? முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவார்கள் என்று அலசுகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.
மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், விசிக, மமக, காந்தியமக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து மக்கள் நலன்காக்கும் கூட்டு இயக்கத்தை உருவாக்கின. மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் போராடும் என்று அறிவிக்கப்பட்டது.
வெளியேறிய தமிழருவி மணியன்
இந்த இயக்கத்தில் சேர்ந்த வேகத்திலேயே வெளியேறினார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். "இந்த அணி தேர்தல் வரை நீடிக்காது. இதில் உள்ள கட்சிகள் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து பழக்கப்பட்ட கட்சிகள். இது அ.தி.மு.க.வை நோக்கி நகரும் முயற்சிதான். எனவே நான் வெளியேறி விட்டேன் என்பது தமிழருவி மணியனின் கருத்து.
முரண்டு பிடித்த மமக
இந்த இயக்கம் தேர்தலை சந்திக்கும் என வைகோவும் மற்றவர்களும் அறிவிக்கவே, இந்த முடிவுக்கு எதிராக ம.தி.மு.க.வின் நிர்வாகிகள் பலர் தி.மு.க. பக்கம் தாவினர். நாங்கள் இந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்... இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல எனச்சொல்லி வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி. இது மனித நேய மக்கள் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
உதயமான கூட்டணி
இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் நிலைமையும் ஊசலாட்டாத்தில் இருக்க... தேர்தலுக்கான கூட்டணி என அறிவித்து தேர்தலை சந்திப்பதற்குள் இந்த அணி காணாமல் போய்விடும் என விமர்சனம் பரவியது. ஆனால் ஒரு வழியாக நவம்பர் 2ம் தேதி மக்கள் நலக் கூட்டணி என்று நான்கு கட்சிகளும் ஒன்றாக இணைந்து அறிவித்து விட்டனர்.
யாருடன் கூட்டணியில்லை
அதிமுக, திமுக, பாஜக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என்பது மக்கள் நலக்கூட்டணியின் கொள்கை முடிவு.
யார் யார் வரலாம்
அதே நேரத்தில் தேமுதிகவின் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் ஆகியோர் தங்களின் கூட்டணிக்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். அறிவிப்பு வெளியான உடனேயே நன்றி சொன்னார் ஜி.கே.வாசன், ஆனால் விஜயகாந்த் மவுனம் சாதிக்கிறார்.
விஜயகாந்த் நிலை என்ன?
விஜயகாந்த் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். ஜெயிக்கிற கூட்டணியில் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனராம். எனவே திமுக அணியை தேடி போகவேண்டாம் ஆனால் நாம் இருக்கும் அணிக்கு திமுக வந்தால் பரவாயில்லை என்று கூறியுள்ளனராம்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில்
தன்னை முதல்வராக முன்னிறுத்தி, பாஜக அணியில் தொடர்வது, இரண்டாவதாக பாஜகதன்னை முதல்வராக முன்னிறுத்தி, பாஜக அணியில் தொடர்வது, இரண்டாவதாக பாஜக - தேமுதிக அணியில் திமுகவை இணைத்துக்கொள்வது அதுவும் அமையாவிட்டால் மக்கள் நலக்கூட்டணியில் இணைத்துக்கொள்வது என்று மூன்று ஆப்சன்களை வைத்திருக்கிறாராம்.
வாசன் மனநிலை
அதேநேரத்தில் அதிமுக உடன் கூட்டணி சேரவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் ஜி.கே.வாசன், மக்கள் நலக்கூட்டணியின் மீது ஒரு கண் வைத்திருக்கிறாராம். கூட்டணிக்கு வருமாறு, ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்தபோதும், விஜயகாந்திடம் பேசுங்கள், அவர் வருவதாக இருந்தால் எனக்கும் ஓகேதான் என்று கூறினாராம்.
வாசனிடம் பேசிய விஜயகாந்த்
அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியினருக்கு எந்த பதிலும் சொல்லாத விஜயகாந்த், கூட்டணியில் இணைவது பற்றி ஜி.கே.வாசனிடம் மட்டும் பேசியிருக்கிறாராம். எப்படியோ வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியில் வாசனும், விஜயகாந்தும் இணைவார்களா? ‘டிரிபிள் வி' கூட்டணி உருவாகுமா? என்பது இன்னும் சிலமாதங்களில் தெரியவரும். அப்படி விஜயகாந்த், வைகோ இணையும் பட்சத்தில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தக்கவைக்க போராட்டம்
மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கு முன்பே உடைந்து போகும் என்று ஆருடம் கூறி வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன், எனவேதான் தேர்தல் வரை இந்த அணியை கொண்டு செல்வதில் இதில் உள்ள கட்சிகள் மிக கவனமாய் செயல்பட்டு வருகின்றன. சில விசயங்களைப் பேசக்கூடாது குறிப்பாக ஈழம் பற்றியோ. முல்லைப்பெரியாறு பற்றியோ பேசக்கூடாது என்று கண்டிசன் போடப்பட்டுள்ளதாம். தற்போது வெளியிடப்பட்ட குறைந்த பட்ச செயல்திட்டத்துக்கான வரைவு அறிக்கையிலும் இது தெளிவாக தெரியவந்துள்ளது.
சமரச உடன்படிக்கை
கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணு உலை, முல்லை பெரியாறு அணைப்பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளில் முரண்பட்டு நிற்கும் நிலையில், குறைந்த பட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையில் இதில் சமரசம் செய்து கொண்டுள்ளன.
விட்டுகொடுத்த மதிமுக
தன்னுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் என்று கட்டாயம் குறிப்பிடும் மதிமுக, தன் முக்கிய கோரிக்கையை இடதுசாரி கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்துள்ளது. கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை,முல்லைபெரியாறு அணைப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தேர்தலை சந்திக்க தயார்
எது எப்படியோ? சட்டசபை தேர்தலை சந்திக்க சில சமரசங்களை செய்து கொண்டு உதயமாகிவிட்டது மக்கள் நலக்கூட்டணி. சட்டசபை தேர்தல் வரை இந்த கூட்டணி என்ற தேரினை வைகோ சரியான முறையில் இழுத்துச் சென்று நிலை சேர்ப்பாரா என்று காத்திருக்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.