பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும் - திரும்ப பெற ஜெ., வலியுறுத்தல்
சென்னை: ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்படையும் என்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எண்ணெய் நிறுவனங்கள் 1.9.2016 முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 37 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 78 காசு என்ற அளவிலும் உயர்த்தியுள்ளன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை உலக அளவில் உயர்ந்துள்ளதை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டதால் இது போன்ற விலை ஏற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலையினை கருத்தில் கொண்டு இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலையை நிர்ணயம் செய்வது சரியானதல்ல என நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன்.
இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் விலை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை, அவற்றை சுத்திகரிப்பதற்கான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை நிர்ணயம் செய்வதே சரியானதாகும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயம் செய்யப்படவேண்டிய விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது தவறானதாகும். இந்த விலை நிர்ணயக் கொள்கை எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் பெறவே வழிவகுக்கிறது.
உலக சந்தையில் எண்ணெய் பொருட்களின் விலைகள் சரிந்தபோது அதன் முழுப்பலன் பொதுமக்களை சென்றடையவிடாமல் கலால் வரியை மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது உலக சந்தையில் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, இங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது நியாயமானது அல்ல.
மிக அதிக அளவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். அதிகரித்து வரும் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும்.
ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்படையும். எனவே எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.