ரயில் டிக்கெட் 'கன்பார்ம்' ஆகாததால் பெங்களூருவிலேயே தங்கி குண்டுவெடிப்பில் பரிதாபமாக பலியான பவானி!
சென்னை: சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகாத காரணத்தால் பெங்களூருவிலேயே தங்கிய போது குண்டுவெடிப்பில் பவானி பலியானதாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு சர்ச் சாலையில் நேற்று குண்டு வெடித்ததில் சென்னையைச் சேர்ந்த 37 வயது பெண் பவானி உயிரிழந்தார். அவரது உறவினர் கார்த்திக் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டிடத்துக்குப் பின்புறம் ரோமெக்ஸ், சர்மானி ஹோட்டல் அமைந்துள்ள ஜெனரல் பாட்டர்ஸ் சாலை பூபேகம் செகண்ட் லேன் பகுதியில் உள்ள வசித்து வந்தவர் பவானி. இவரது கணவர் பாலன், டயர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
உறவினர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக பவானி தமது குழந்தைகள், பெங்களூரில் இருந்து வந்திருந்த கார்த்திக் உட்பட 8 பேருடன் ஒருவாரத்துக்கு முன்பு பெங்களூர் சென்றிருந்தார். பவானி மற்றும் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை திரும்ப டிக்கெட் புக் செய்திருந்தனர். ஆனால் அவர்களது டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை.
இதனால் திட்டமிட்டபடி சென்னை திரும்ப முடியாமல் பெங்களூரிலேயே அவர்கள் தங்க நேரிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் ஷாப்பிங் செய்துவிட்டு ரிச்சர்ட் சாலையில் கோகனட் குரோவ் ஹோட்டல் வளாகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து பவானி, கார்த்திக் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் பவானிக்கு தலையில் காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. குண்டுவெடிப்பில் பவானி ரத்த வெள்ளத்தில் மிதந்த போது அவரை 'தற்கொலைதாரியோ" என்று சந்தேகித்துள்ளனர் அப்பகுதியில் இருந்தவர்கள். இருப்பினும் நரசிம்ஹா என்ற ஆட்டோ டிரைவர் பவானியை மீட்டு மல்லையா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்குதான் சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த கார்த்திக், பெங்களூர் லால்பாக் அருகே மாவலியில் தங்கி, தயானந்த சாகர் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். விடுமுறைக்காக பவானி வீட்டுக்கு சென்னை வந்துவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றிருந்தார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது பவானியின் குழந்தைகள் லக்ஷ்மி தேவி மற்றும் பாரத் ஆகியோர் அருகே உள்ள உள்விளையாட்டு அரங்கில் விளையாடிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச் சம்பவத்தில் 'ஐகேட்' நிறுவன ஊழியர் சந்தீப், ஐபிஎம் ஊழியர் வினய் ஆகியோரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் இருந்து வந்த நண்பர்களை சந்திக்க வந்த போது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். இவர்கள் ஹோஸ்மத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள பவானியின் வீட்டு உரிமையாளர் கூறுகையில், தமது உறவினர்கள் குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதால் பெங்களூரு செல்வதாக" கூறினார் என்று தெரிவித்திருக்கிறார்.