சாதி வெறிக்கு பலியான நாமக்கல் சுமதி... மருமகளை கொன்ற மாமனார், மாமியார் கைது
நாமக்கல்: சாதி வெறியின் காரணமாக, நாமக்கல் சுமதியை அவரது மாமனாரும், மாமியாரும் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தோஷ். இவரது மனைவி சுமதி. இவர்கள் கடந்த 2008ம் ஆண்டு இருவரும காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தில் இத்தம்பதியினரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனிடையே தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனைவி சுமதி,35 மட்டும் நாமக்கல்லில் வசித்து வந்தார்.
சந்தோஷ், திங்கட்கிழமை மாலை மனைவி சுமதியை செல்போனில் அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் பதில் இல்லாமல் போகவே, நாமக்கல் வங்கி கிளையில் பணியாற்றும் தனது நண்பர் ஒருவரை அழைத்து வீட்டிற்கு சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி வி.சசிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இந்த கொலையில் சந்தோஷின் பெற்றோர்கள் பழனிவேலு - மாதேஸ்வரி ஆகியோருக்க தொடர்பு இருப்பது தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்திருக்கின்றனர்.போலீசார் நடத்திய விசாரணையில் சாதி வெறியே கொலைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சந்தோஷுக்கும், சுமதிக்கும் 8 வருடங்களுக்கு பிறகு திருமண வரவேற்பு நடத்தப்போவதாக சந்தோஷின் பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். இதற்கான வேலையும், திருச்செங்கோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது.
20ம் தேதி சந்தோஷ், திருச்செங்கோட்டில் தன் பெற்றோர் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும்போது, சந்தோஷின் பெற்றோர் மாதேஸ்வரியும் பழனிவேலுவும், காலை 11 மணிக்கு சுமதி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
தன் மாமனார், மாமியாரை பார்த்ததும் சந்தோசமாக பேசிய சுமதி டீ போட்டுக் கொடுத்திருக்கிறார். அப்போது, படுக்கை அறையில் இருந்த மாதேஸ்வரி, மருமகளான சுமதியை கூப்பிட்டு தன் அருகே அமரச் சொல்லி இருக்கிறார்.
சுமதியும் மாமியாரின் அருகில் எதேச்சையாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மாமனார் பழனிவேல் பின்புறமாக சென்று துண்டால் வாயை பொத்திக் கொள்ள, மாதேஸ்வரி தன் பையில் வைத்திருந்த கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார், அதன் பிறகு பழனிவேலை முதலில் போகச் சொல்லி விட்டு, பிறகு மதேஸ்வரி சென்றிருக்கிறார்'' என்றனர்.
சுமதி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி தாமரைசெல்வன், செய்தியாளர்களிடம் பேசும் போது, சந்தோஷின் பெற்றோர் தான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள். தற்போது அவர்களை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில், முழுமையான தகவல் கிடைத்து விடும் என்று கூறியுள்ளார்.
டிவி சீரியல்களில், சினிமாக்களில்தான் மருமகளை கொலை செய்ய பலவிதமாக திட்டம் போடுவார்கள். ஆனால் தற்போது நிஜமாகவே மருமகளை ஏற்றுக்கொள்வது போல நடித்து கடைசியில் கொலை செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக சாதி ஆணவ வெறிக்கு பலியாகிவிட்டார் சுமதி.