கொடைக்கானல் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி டிஎஸ்பி காலில் விழுந்து கதறிய பெண்கள்!
கொடைக்கானல் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் டிஎஸ்பி காலில் விழுந்து கதறினர்.
கொடைக்கானல்: மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் டிஎஸ்பி காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தும் போலீசார் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்து வந்தனர்.
ஆனால் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையை உடனே அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் தாண்டிக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் சிலர் மதுக்கடையை அகற்றக்கோரி டிஎஸ்பி செல்வத்தின் காலில் விழுந்து கதறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.