கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் கூட்டம்! - வீடியோ
புதுக்கோட்டை கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்த வந்த நிலையில், அதிகாரிகள் கடையை அகற்றாத காரணத்தால் பெண்கள் ஒன்று கூடி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.
உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து ஒரே இரவில் 3321 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. அவ்வாறு மூடிய கடைகளை டாஸ்மாக் அதிகாரிகள் ஊருக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்ப்பு தெரிவித்துவருகின்றனர். புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதாக இல்லை.
இதனால் கொதித்தெழுந்த கொத்தமங்கலம்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறை அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்கி வருவதால் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசின் முதன்மை வருவாயாக டாஸ்மாக் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.