மழையால் வந்த துயரம்... எழுத்தாளர் விக்ரமனின் உடலுடன் 4 நாட்களாக தத்தளித்த குடும்பம்
சென்னை: கன மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக எழுத்தாளர் விக்கிரமனின் இறந்த உடலுடன் வெளியில் போக முடியாமல் 4 நாட்கள் தவித்துப் போய் விட்டனர் அவரது குடும்பத்தினர். நான்கு நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடலை எரியூட்ட முடிந்திருக்கிறது.
சென்னை மழையும், வெள்ளமும் மக்களை பெருமளவில் பாதித்து விட்டது. வாட்டி வதைத்து விட்டது. சொல்லி மாள முடியாத அளவுக்கு பல சோக வடுக்களை விட்டுச் சென்றுள்ளது.

இதில் அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியரும், புதின எழுத்தாளருமான விக்கிரமனின் மரணமும் சேர்ந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி அவர் தனது வீட்டில் காலமானார். ஆனால் தொடர் மழை மற்றும் பெரு வெள்ளம் காரணாக அவரது உடலை வெளியில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால் உடல் தகனம் பெரும் சிரமத்துக்குள்ளாகி விட்டது.
நந்திபுரத்து நாயகி, வந்தியத்தேவன் வாள் உள்பட 33 வரலாற்று நாவல்களை எழுதிய எழுத்தாளர் விக்கிரமன். மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். டிசம்பர் 1ம்ம தேதி அவர் மரணமடைந்தார். அன்றுதான் சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேய் மழை பெய்த நாள். இதனால் விக்கிரமனின் உடலை வைக்க ப்ரீசர் பாக்ஸ் கூட கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் கூட கிடைக்கவில்லை.
இதனால் விக்கிரமனின் உடலை வெளியில் கொண்டு வர முடியாமல், தகனம் செய்ய வழியில்லாமல் தவித்துள்ளது குடும்பம். இதுகுறித்து அவரது மகன் கண்ணன் கூறுகையில், தந்தை மீது அன்பு கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை அவர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினேன். எனது உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உண்டு. அவர்கள் வரும் வரை எனது தந்தையின் உடலை பாதுகாக்க நான் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. தந்தையின் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்சுக்காக நாங்கள் அலையாத இடம் இல்லை.
அதோடு 2-ம் தேதிக்கு பிறகு எந்த செல்போனும் கூட இயங்கவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களுக்கும் யாராலும் உதவி செய்ய முடியவில்லை. இதற்கிடையே மாம்பலத்தில் இன்னும் வெள்ளம் அதிகரித்தது. கழுத்தளவு தண்ணீரில் எங்கு உடலை கொண்டு போக முடியும்? திருவான்மியூர், கண்ணம்மாபேட்டை, கிருஷ்ணாம்பேட்டை மின் மயானங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் என்ன செய்யவென்றே தெரியவில்லை.
இதற்கிடையே மயானம் கிடைக்கும் வரை, உடலை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க முடிவு செய்தோம். தந்தையின் உடலை படகில் வைத்து எடுத்து சென்றோம். ஆனால் இறந்து போய் 2 நாட்கள் ஆகி விட்டதால், எந்த மருத்துவமனையும் உதவி செய்ய முன் வரவில்லை. அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து கடிதம் வாங்கி வாருங்கள் என்றனர். அத்துடன் உடலை வைக்க வேண்டுமென்றால், போஸ்ட் மார்ட்டம் செய்துதான் வைப்போம் என்றும் கூறி விட்டனர்.
ஒரு வழியாக போஸ்ட் மார்ட்டத்துக்கும் சம்மதித்து விட்டோம். ஆனால் போலீஸ் நிலையத்திலோ கடிதம் தர மறுத்து விட்டனர். பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடலைப் பாதுகாக்க முன்வந்தனர். பின்னர் 4 ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை மயானத்துக்கு கொண்டு சென்று பயோ கேஸ் முறையில் தந்தையின் உடலை எரியூட்டினோம் என்றார்.
விக்கிரமன் குடும்பத்துக்கு மட்டும் இந்த சோகம் நேரவில்லை. மாறாக சென்னையில் பலருக்கும் இது ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் பலர் தவித்துள்ளனர். மயானம் கிடைக்காமல், மயானத்திற்குப் போக முடியாமல், மயானத்திற்குப் போனாலும் அங்கு தேங்கிக் கிடந்த வெள்ள நீருக்கு மத்தியில் தகனம் செய்ய முடியாமலும், அடக்கம் செய்ய முடியாமலும் பலரும் தவித்துப் போனார்கள்.












Click it and Unblock the Notifications