கோபம், ஆக்ரோஷம், படபடப்பு... முழுசா சந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி! #பிளாஷ்பேக்
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு எதிராக செயல்படத் தொடங்கியதால் சசிகலா தனது கோபத்தை பேட்டியின் மூலம் முதல்முறையாக வெளிஉலகிற்கு காட்டினார்.
Recommended Video
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு எதிராக செயல்படத் தொடங்கி தர்மயுத்தம் அறிவித்ததால் கடந்த ஆண்டு கோபத்தின் உச்சிக்கே போனார் சசிகலா. இதன் வெளிப்பாடாக நள்ளிரவில் போயஸ் கார்டனில் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரின் கன்னிப் பேட்டி சசிகலாவின் சுயரூபம் என்ன என்பதை அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக்கியது. தனக்கு எதிராக ஒருவர் எப்படி செயல்படலாம் என்ற கோபம், ஆக்ரோஷம் சசிகலாவின் அந்த பேட்டியில் வெளிப்பட்டது.
பிப்ரவரி 7,2017 அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே யாராலும் மறக்க முடியாத நாள். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு முடிவில் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்து, சசிகலாவிற்கு எதிரான அணுகுண்டை வீசினார்.
வேண்டாம் என்று சொன்ன போதும் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு என்னை அவமானப்படுத்தி வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டார்கள் என்று வெடித்தார். கட்சி, ஆட்சியில் மக்களால் விரும்பும் ஒருவர் தான் இருக்க வேண்டும். எனவே கட்சி, ஆட்சியை மீட்க தனி ஒருவனாக போராடத் தயாராகி விட்டேன் என்றார்.
சசிக்கு விழுந்த முதல் அடி
அதிமுகவில் ஜெயலலிதாவிற்குப் பிறகு தாங்கள் தான் எல்லாம் என்று எண்ணிய சசிகலா குடும்பத்தின் எண்ணத்தில் விழுந்த முதல் இடி ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த தியானம். அண்ணன் செத்த திண்ணை காலியானதும் அது தனக்குத்தான் என்று எண்ணிக் காத்திருந்த சசிகலாவின் ஆசையிலும் மண் விழுந்தது.
உருகிப் பேசிய சசிகலா
இதனால் கோபத்தின் உச்சிக்கே போனார் சசிகலா. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது முதன் முதலில் அதிமுகவினர் மத்தியில் எழுதி வைத்த வாசகத்தை படித்தார். அதில் அக்காவிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்ததாக திரும்ப திரும்ப அனைவர் மனதிலும் நிலை நிறுத்தினார்.
சசியின் முதல் நள்ளிரவு பேட்டி
கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதல் காலர் வைத்த முக்கால் கை பிளவுஸ், பச்சை நிற சேலை என்று ஜெயலலிதாவின் பிம்பத்தை பிரதிபலித்தார் சசிகலா. பிப்ரவரி 7ம் தேதி பன்னீர்செல்வம் சொன்ன குற்றச்சாட்டுக்கு நள்ளிரவு 1.15 மணியளவில் போயஸ் கார்டன் இல்ல வாசலில் தனது முதல் பேட்டியை அளித்தார் சசிகலா.
எரிச்சலின் வெளிப்பாடு
பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது சென்டிமென்ட்டாக பேசி கர்சீப் நனைத்த சசிகலா, பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து கொடுத்த பேட்டியில் கோபமும், ஆக்ரோஷமும் கொப்பளித்தது. தனக்கு எதிராக ஒருவர் எப்படி கிளம்பலாம் என்ற எரிச்சலின் வெளிப்பாடாகவே அந்த பேட்டி இருந்தது.
ஓ.பி.எஸ்க்கு எதிராக பொங்கிய சசிகலா
பச்சை நிற சேலையில் வெளியே வந்த சசிகலா தொண்டர்களை பார்த்து இரட்டை விரல்களை காட்டி கையசைத்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு "நிச்சயமாக செய்வோம்" என்றார்.
திமுகவை குற்றம் சாட்டிய சசிகலா
ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருக்கிறது. காரணம் 4 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரும் முதல்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்கள். நிர்பந்தப்படுத்தினோம் என்று யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததைத் தான் அவர் சொல்கிறார். நீங்கள் அன்றே பார்த்திருக்கலாம் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருந்தார், அப்படி இருக்கும் போது ஏன் நிர்பந்தப்படுத்தப் போகிறோம். அதிமுகவினர் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளனர் என்றும் சசிகலா கூறினார்.
சசிகலாவின் முகபாவனைகள்
சசிகலாவின் இந்த பேட்டி சசிகலாவின் அணுகுமுறை பற்றி செவி வழித் தகவல்களாகக் கேட்டவர்களுக்கு மிகப்பெரும் ஆச்சரியமாக இருந்தது. கைகளை சேர்த்தும், கண்களை உருட்டியும், நாக்கை மடக்கியும் சசிகலா பேட்டியின் போது செய்த முகபாவனைகள் இருக்கிறதே அப்பப்பா. அவருடைய பேட்டியில் ஒரு கர்வமும், எகத்தாளமும் இருந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறும் போது இப்போது அவருடன் இணக்கமாக இருக்கும் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.