இடைத்தேர்தலில் சரித்திரம் படைத்த ஏற்காடு வாக்குப் பதிவு
சேலம்: தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் 90% வாக்குகள் பதிவாகி ஏற்காடு சரித்திர சாதனை படைத்திருக்கிறது.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் மாறன், அதிமுக சார்பில் மறைந்த பெருமாளின் மனைவி சரோஜா உள்பட 11 பேர் போட்டியிட்டனர். மற்ற கட்சிகள் ஏதும் போட்டியிடாததால் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.
வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 290 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

269 சாவடிகளில் வெப் கேமரா
இதில் 269 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணித்தது. மற்ற 21 வாக்குசாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மலையில் 67 கிராமங்கள்.
ஏற்காடு தொகுதியில் 67 கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. காலையில் பனி, குளிர், சில இடங்களில் லேசான தூறல் மழையும் இருந்தது. அதையும் மீறி பல இடங்களில் காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் வாக்குசாவடியில் வரிசையில் காத்திருந்தனர்.

அமைதியான வாக்குப் பதிவு
ஏற்காடு தொகுதியில் அசம்பாவிதம் எதுவுமின்றி வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது.

2 மணி நேரத்தில் 18%
முதல் இரண்டு மணி நேரத்தில் 18 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் நேரம் செல்ல செல்ல வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

பகலில் 43%
வாக்குப் பதிவு பகல் 12 மணிக்கு 43%- த்தையும் பிற்பகல் 2 மணிக்கு 67%த்தையும் எட்டியது.

86% வாக்குப் பதிவு
மாலை 4 மணி நிலவரப்படி 86% வாக்கு பதிவாகியிருந்தது. கடைசியாக ஏற்காடு தொகுதியில் 89.75 சதவீதம் வாக்குப்பதிவானது.

திருமங்கலம் சாதனை
தமிழக தேர்தல் வரலாற்றில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தான் சாதனையாக இருந்தது. அத்தேர்தலில் 88.89% வாக்குகள் பதிவாகி இருந்தன.

9 வாக்குபதிவு மையங்களில் 90%
ஏற்காடு தொகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இதில், 26,860 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 41 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 8 மணி முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். அத்தியூர், மஞ்சக்குட்டை, பிலியூர், வெள்ளக்கடை, நாகலூர், கரடியூர், கொண்டையனூர், சொனப்பாடி, வேலூர் ஆகிய 9 வாக்குப்பதிவு மையங்களில் நேற்று மதியம் 3.30 மணிக்கே 90% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை நடந்த பொதுத் தேர்தலில் 1967ம் ஆண்டு 76.57 சதவீதம் பெற்ற ஓட்டுதான் அதிகமாக இருந்தது. கடந்த தேர்தலில் அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு, 77.8 சதவீதம் பதிவாகியது. அதில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகப் பட்சமாக 89.07 சதவீதம் பதிவாகியது. இப்போது அது முறியடிக்கப்பட்டு ஏற்காட்டில் 89.24 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.

நோட்டா வசதி காரணமா?
ஏற்காடு தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யும் வசதி மின்னணு வாக்கு இயந்திரத்தில் செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர்களுக்கு அடுத்து 12வது பட்டனில் நோட்டா வசதி செய்யப்பட்டது. ஏற்காடு தொகுதியில் பல இடங்களில் நோட்டா பதிவு செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இதனால் வாக்குப்பதிவு அதிகரித்திருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications