அதிமுகவில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்... பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன்!
அதிமுகவில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலக்கி வைத்ததில் வருத்தம் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சி, கட்சி பலவீனமாக நான் காரணமாக இருக்கமாட்டேன் என அவர் கூறினார்.
ஏதோ ஒரு பயத்தில் அமைச்சர்கள் திடீர் முடிவெடுத்துள்ளதாகவும் டிடிவி.தினகரன் கூறினார். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட பயத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றே ஒதுங்கிவிட்டேன்
கட்சியில் இருந்து என்னை நீக்குவதால் நல்லது நடக்கும் என்றால் நடக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சியில் இருந்து நேற்றே ஒதுங்கி விட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்சனையும் இல்லை
மேலும் கூட்டம், போட்டி கூட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேச விரும்பவில்லை என்றும் தினகரன் கூறினார்.
இரு அணிகளும் இணைவதால் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார்.
பிளவு ஏற்பட விரும்பவில்லை
கூறிய தினகரன், அமைச்சர்கள் யாருக்கும் பயப்படமால் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சரிக்கு சரியாக போட்டியிட்டு கட்சியில் பிளவு ஏற்பட நான் விரும்பவில்லை என்றும் கூறினார்.
எந்த பாதிப்பும் ஏறபட்டு விடக்கூடாது
இந்த சலசலப்பால் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழல்
சசிகலா குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் நேற்று அறிவித்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரனின் இந்த பேட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.