தாய், 2 மகன்கள் கொலை... கொடூர இளைஞருக்கு 2 தூக்கு – இரட்டை ஆயுள் தண்டனை!
கோவை: கோவையில் பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தை உட்பட மூவரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞருக்கு இரட்டை தூக்குதண்டனை, இரட்டை ஆயுள்தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கோவை சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மருதமாணிக்கம் (35). இவரது வீட்டில் அம்மா கோவிந்தம்மாள், மனைவி வத்சலாதேவி (28), மகன்கள் மகிழன் (7), பிரனீத் (11 மாதம்) ஆகியோர் வசித்தனர்.
வீட்டின் மற்றொரு பாகத்தில் மானாமதுரை அருகே கருங்கல்பாளையம் செந்தில் (37) வாடகைக்கு குடியிருந்தார். இவர், கடந்த கடந்தாண்டு 1.6.14 தேதியன்று வீட்டில் இருந்த மருதமாணிக்கத்தின் மனைவி வத்சலாதேவி, குழந்தைகள் மகிழன், பிரனீத் ஆகியோரை குத்தி கொன்றார்.

சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி., சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், மூன்று பேரை கொன்ற கொலையாளி செந்திலுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிபதி அளித்த பரபரப்பு தீர்ப்பு
இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்பு இனிமேல் வருங்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என நினைக்க தோன்ற வேண்டும்.
கொலையுண்ட பெண்ணின் உடலில் 54 இடங்களில் குத்துக்காயம் உள்ளது. எதுவும் அரியாத தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாத 6 வயது குழந்தை உடலில் 21 இடங்களில் குத்துக்காயம் உள்ளது. எதுவும் அறியாத உலகத்தை பற்றி தெரியாத 11 மாத குழந்தை உடலில் 11 இடங்களில் குத்துக்காயம் உள்ளது.
கொடூர கொலைகள்
பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவும் அது நடக்காததால் தன்னை வெளியில் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்ற பயத்திலும் இந்த கொடூர கொலைகள் செய்யப்பட்டுள்ளன.
தண்டனை விபரம்
பெண்ணை கொன்றதற்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 6 வயது குழந்தையை கொன்றதற்காக தூக்கு தண்டனையும், 11 மாத குழந்தையை கொன்றதற்காக தூக்கு தண்டனையும், குழந்தைகளிடம் இருந்த நகைகளை திருடியதற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், வீட்டிற்குள் அத்துமீறி சென்றதற்காக ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறுகிறேன். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications