வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்.. நிவாரணத் தொகை உயர்த்தப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள்
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 100 செ.மீட்டருக்கும் மேல் பெய்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கனமழை, வெள்ளம்
வங்கக் கடலில் இரண்டு முறை உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் அதி கனமழை பெய்து வருகிறது. மழையால் நகரங்களில் உள்ள வீடுகள், சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆறுகளில் ஓடும் வெள்ளத்தால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்னும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மக்கள் குறை கேட்க அமைச்சர்கள்
இதற்கிடையே வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப்பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிலரை பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டிருந்தார். இதில் தஞ்சை மாவட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மக்களின் குறைகளை கேட்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டிருந்தார்.
விவசாய நிலங்களை பார்வையிட்டார்
அதன்படி தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டு வருகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கரம்பயம், காட்டுக்கோட்டை, திருப்பந்துருத்தி, குளறுமஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்கள், நெற்பயிர்களை பார்வையிட்டார். அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.
இழப்பீடு தொகை உயர்த்த நடவடிக்கை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தஞ்சை மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய கனமழை பெய்துள்ளது. வழக்கத்தை விட 60 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதால் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. இன்னும் 4 நாட்களில் நாட்களில் வயல்களில் தண்ணீர் வடியாவிட்டால் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பயிர் இழப்பிற்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும்" என கூறினார்.