ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி.. காப்பாற்ற முயன்ற இளைஞர்.. இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கல்லணை கால்வாய் ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார். தஞ்சை மானம்புச்சாவடி வைகோல்கார தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன்.
இவருடைய மகள் ஆயிஷா பேகம். இவர் மானம்புச்சாவடி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ஆற்றில் குதித்தார்
இந்த நிலையில் நேற்று தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்று பாலத்தின் அருகே ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கல்லணை கால்வாய் ஆற்றில் குதித்தார். மாணவி திடீரென தண்ணீரில் குதித்து அடித்து செல்வதை அந்த வழியாக சென்ற ஒரு இளைஞர் பார்த்தார்.

காப்பாற்ற முயன்றனர்
அவரும், அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு இளைஞரும் வேகமாக ஓடி வந்து ஆற்றில் குதித்து மாணவியை காப்பாற்ற முயன்றனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் மாணவியை காப்பாற்ற முடியவில்லை. இதனால் ஆற்றில் குதித்த இளைஞரில் ஒருவர் படித்துறையில் ஏறிவிட்டார். ஆனால் மாணவியும், மற்ற இளைஞரும் நீரில் மூழ்கினார்கள்.

2 பேரும் உயிரிழப்பு
இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்த மாணவி மற்றும் தண்ணீரில் மூழ்கிய இளைஞரின் உடல்களை தேடினார்கள். 2 பேரின் உடல் வெட்டிக்காடு அருகே ஆற்றங்கரை ஓரம் காணப்பட்டது. இதனையடுத்து அவர்களின் உடல் கைப்பற்றப்பட்டது. 2 பேரின் உடலையும் தீயணைப்புத்துறையினர் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை
இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முகிலன் என்பது தெரியவந்தது. நீரில் மூழ்கிய மாணவியும், அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி ஆயிஷா பேகம் எதற்காக ஆற்றில் குதித்த்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications