கஜா தாண்டவம்.. தண்ணீர் பாய்ந்த சம்பா பயிர்கள்.. கண்ணீருடன் குமுறிய விவசாயிகள்!
கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதூர், புலவன்காடு, திவ்வியக்காடு, ஆலடிக்குமுளை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதூர், புலவன்காடு, திவ்வியக்காடு, ஆலடிக்குமுளை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் நாசமானதால் தென்னை விவசாயிகள் மீளாத துயரத்தில் உள்ளனர். அதே நேரம் கடும் மழை வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் முழ்கியதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
[கஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல் ]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கொரடாச்சேரி, இலவங்கார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி சம்பா பயிர்கள் முழ்கி உள்ளன.
உரிய நேரத்தில் ஆறுகள், வாயக்கால்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரத காரணத்தினால், வயல்களில் தண்ணீர் பாய்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புயல் பாதித்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் விவசாயிகளுக்கு இன்னும் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முதல், மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது துன்பங்களை தெரிவித்து வருகின்றனர்.