கஜா புயல் சூறையாடிய பட்டுக்கோட்டையில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாம்- புதுவை பீச்சில் சிஎம் ஆய்வு!
தஞ்சை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டையில் தற்போது மாண்டஸ் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் பட்டுக்கோட்டை விரைந்துள்ளனர்.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயல் தற்போது வலு குறைந்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் இந்த மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது.
மாண்டஸ் புயல், நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்தும் வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புயலால் கொந்தளிக்கும் மெரினா கடல்.. வார்னிங்கை காற்றில் பறக்கவிட்டு.. கூலாக செல்ஃபி எடுக்கும் மக்கள்
பட்டுக்கோட்டையில் பேரிடர் மீட்பு படை
தஞ்சை மாவட்டம் கடலோர பகுதியில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது கடலோர பகுதியான பட்டுக்கோட்டையில் மழை பெய்து வருகிறது. கடந்த கஜா புயலின் போது இந்த பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை வந்த 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் பட்டுக்கோட்டை விரைகின்றனர். ஸ்டெரச்சர், மரம் அறுக்கும் இயந்திரம், மிதவை, படகு உள்ளிட்ட ஆயத்த பொருட்களுடன் செல்கின்றனர்.
புதுவை முதல்வர் ஆய்வு
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடற்கரை பகுதிகளில் இருந்து பொதுமக்களை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்து போலீசார் அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் கூறியதாவது:
51 மீனவ கிராம பகுதிகள் உள்ளன. மாமல்லபுரத்தை நோக்கி கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடற்கரை ஒட்டி உள்ள அனைத்து மீனவர் அனைவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் மீண்டும் கரை திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மின்சார துறையில் இருக்கக்கூடிய அனைத்து மின்கம்பங்களும் ஏதாவது சேதம் அடைந்தால் உடனடியாக அதை மாற்றுவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மரங்கள் ஏதேனும் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். இதுபோக பேரிடர் மேலாண்மை மீட்பு குழு 45 பேர் உள்ள ஒரு குழு மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்து அவர்களையும் அங்கே தங்க வைத்திருக்கிறோம்/ இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அதி முதல் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் ராகுல்நாத் கூறினார்.
கல்பாக்கம் மீனவர்களுக்கு பாதிப்பு
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே சின்ன குப்பம், பெரியகுப்பம், நடுக்குப்பம், ஆலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை தங்களது வீட்டின் அருகே நிறுத்தி வைத்தனர். ஆனால் கடல் அலையில் படகுகள் அடித்துச் சென்ற நிலையில் தங்களது உடமைகளை இழந்து மீனவர்கள் தவித்து வருகின்றனர். தங்களது பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து இருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படாது என்கின்றனர் கிராம மக்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பு
பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், ராமேஸ்வரம் கடல் பகுதியில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்று காரணமாக பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் நங்கூரம் அறுந்து தரை தட்டி கரை ஒதுங்கி சேதமடைந்தது. கடலில் சேதமடைந்த படகுகளை மீட்கும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மண்டபம் மீன் பிடி துறைமுகத்தில் முறையாக நங்கூரமிடாமல் நிறுத்தி வைக்கபட்டிருந்த சேசு சூசை என்பவருக்கு சொந்தமான படகு கரை ஒதுங்கி பலத்த சேதமடைந்தது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் சுமார் 60 ஆண்டு பழமையான துறைமுகம் என்பதால் போதிய அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. இதனால் இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு உடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே மாண்டாஸ் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகு மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இன்று நான்காவது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணியில் கடல் சீற்றம்
வேளாங்கண்ணி எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வேளாங்கண்ணி கடலில் கடும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் கடல் அலையால் சேதம் அடைந்து வருகிறது. இதைப்போல் கடற்கரை ஓரங்களில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகளுக்கும் மழைநீர் சூழ்ந்துள்ளது .