EXCLUSIVE: உடம்பா? ரப்பரா? தமிழ் புரூஸ் லீ அபுல்ஹசன் - கொடிபோல் அந்தரத்தில் தொங்கும் சாகச இளைஞர்
தஞ்சாவூர்: எந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலும் இன்றி அதிராம்பட்டினத்தை சேர்ந்த அபுல்ஹசன் என்ற இளைஞர் தூணை பிடித்து கொடிபோல் அந்தரந்தில் தொங்குவது, கைகள் இன்றி 2 சுவர்களில் ஏறுவது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு இளைஞர் சுவற்றின் தூண்களை இரண்டு கரங்களால் பிடித்துக்கொண்டு கொடிபோல் அந்தரத்தில் நிற்கும் வீடியோதான் அது. பலரும் யார் எந்த இளைஞர்? அவரால் எப்படி இது சாத்தியமானது? என்ற கேள்வியை எழுப்பிவந்தனர்.
இலங்கை நெருக்கடி: 1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம் - பிரதமர் ரணில் தகவல்
அவர்களின் கேள்விகளுக்கு விடைகான ஒன் இந்தியா தமிழ் முற்பட்டது. அந்த சாகச இளைஞரை தொடர்பு கொண்டு அவரது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் இதுபோன்ற சாகசங்களை கற்றுக்கொண்டது எப்படி என்பன போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
யார் இந்த இளைஞர்?
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது அபுல் ஹசன் (வயது 25). பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மதர்சாவில் ஆலிம் என்று சொல்லப்படும் இஸ்லாமிய மார்க்க கல்வியை நிறைவு செய்துவிட்டு அதிராம்பட்டினத்தில் உள்ள ஹுதா என்ற மசூதி ஒன்றில் தொழுகை நடத்தி வருகிறார். அவரிடம் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்.
கேள்வி: இந்த கலைகளின் மீது எப்படி ஆர்வம் வந்தது?
அபுல்ஹசன்: பள்ளி படிக்கும்போதே 2 கால்களையும் விரிப்பதை கற்றுக்கொண்டேன். அதிலிருந்து ஒவ்வொன்றாக நான் முயற்சி செய்து பல கலைகளை தெரிந்துகொண்டேன். ஒன்றை செய்து முடித்துவிட்டால் அடுத்த சாகசத்துக்கு பயிற்சி செய்வேன். சுவற்றில் கை வைக்காமல் குதித்து குதித்து 2 கால்களாலேயே ஏறிவிடுவேன். புஷ் அப் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. சாதாரணமாக 100 புஷ் அப்களை இப்போது கூட என்னால் செய்ய முடியும். அதிகபட்சமாக 150 புஷ் அப்களை செய்வேன்.
கேள்வி: இதையெல்லாம் எப்படி கற்றுக்கொண்டீர்கள்? சொந்தமாகவா அல்லது வீடியோக்களை பார்த்தா?
அபுல்ஹசன்: நானாகவேதான் பெரும்பாலும் கற்றுக்கொண்டேன். புஷ் அப்களிலேயே பல முறைகளை நானே செய்வேன். ஒரு கையில், அடுத்து 2 விரலில், ஒரு விரலில் புஷ் அப் எடுத்திருக்கிறேன். புரூஸ் லீ இதை செய்வார். அதே போல் FLAG (2 கைகளை பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்குவது) போன்றவற்றை செய்து பழகினேன். இதை HUMAN FLAG என்று சொல்வார்கள். இதை முதலில் ஒரு கம்பியை பிடித்து செய்துபார்த்தேன். நான் 6 மாதத்துக்கு முன் எடுத்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. என்னால் அதே கோணத்தில் இரண்டு கைகளால் அந்தரத்தில் சுற்றவும் முடியும். இதையும் புரூஸ் லீ போன்ற கலைஞர்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல் டிராகன் பிளாக் என்பதையும் என்னால் செய்ய முடியும்.
கேள்வி: வேறு என்னென்ன சாகங்களை நீங்கள் செய்வீர்கள்?
அபுல்ஹசன்: உடலை நேராக வைத்துக்கொண்டு 2 கம்பிகளை பிடித்துக்கொண்டு என்னால் நிற்க முடியும். இதை சமீபத்தில் கற்றுக்கொண்டேன். இதை தாண்டி நீச்சல், குதிரை பயிற்சி, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஃபிளிப் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொண்டேன். சைடு பெல்டி, ஹேண்ட் ஸ்ப்ரிங், பின்னால் பூமியை தொட்டு காலை வைத்து திரும்பி எழுந்திருக்க என்னால் முடியும். அம்பு எய்தல், ஈட்டி எரிதல் போன்றவற்றை துல்லியமாக செய்வேன். சிறு வயிலிருந்து கயிறு ஏறவும் எனக்கும் தெரியும். தலைகீழாக புஷ் அப் செய்வது, தலையை மட்டும் வைத்து 5 நிமிடத்துக்கும் மேலாக தலைகீழாக நிற்க முடியும். நீச்சலில் அதிகம் நேரம் மூச்சை இழுத்து பிடிக்க முடியும். குளத்தில் 2 மணி நேரத்துக்கும் மேல் நீச்சல் அடிப்பேன். களறி, கம்பு சுற்றுதல் போன்றவற்றை அதிகம் செய்வேன்.
கேள்வி: உங்களுக்கு யாரை பார்த்து இதுபோல் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்தது? யார் பயிற்சியளித்தது?
அபுல்ஹசன்: சிறு வயதிலிருந்தே எனக்கு சண்டை பயிற்சி, மல்யுத்தம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தற்காப்பு வீடியோக்களை பார்ப்பேன். புரூஸ் லீ, ஜாக்கி சான் போன்றவர்களின் சண்டையை பார்ப்பேன். களறியில் ஆர்வம் அதிகம். கராத்தே போன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர்கள் செய்வதை பார்த்து நானே வீட்டிலிருந்து பயிற்சி செய்வேன். யாரும் எனக்கு பயிற்சியாளராக இருந்ததில்லை. நானாகவேதான் எல்லா பயிற்சியும் செய்தேன்.
கேள்வி: தற்போது இந்த பயிற்சிகளை வைத்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
அபுல்ஹசன்: நான் மாணவர்களுக்கு இந்த கலைகளை கற்றுக்கொடுத்து வருகிறேன். தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணிபுரிந்தேன். கால்பந்து பயிற்சியளிப்பேன். அவர்களுடன் சேர்ந்து விளையாடுவேன். கைப்பந்து பயிற்சியளிப்பேன். கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு ஊக்கமளிப்பேன்.
கேள்வி: உங்களுடைய உணவு முறை பற்றி சொல்லுங்கள்?
அபுல்ஹசன்: உணவில் நான் அதிக கவனம் செலுத்துவேன். எவ்வளவு பசித்தாலும் சமோசா போன்ற எண்ணெய் பொருட்களை சாப்பிட மாட்டேன். நாட்டுக்கோழிதான் சாப்பிடுவேன். பிராய்லர் கோழியை சாப்பிட மாட்டேன். எனது தந்தையும் உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்துவார் என்பதால் இதை என்னால் எளிதில் கடைபிடிக்க முடிந்தது. வான்கோழி, நாட்டு ஆடுகளை சாப்பிடுவேன். மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுவேன். நேரத்துக்கு சாப்பிடுவேன். காலை 8 மணி மேல் மதியம் வரை பசித்தாலும் சாப்பிட மாட்டேன். முஹம்மது நபி சொன்னதைபோல் வயிறு முட்ட சாப்பிடாமல் 3ல் ஒரு பங்குதான் சாப்பிடுகிறேன்.
கேள்வி: உங்களை போன்ற மற்றவர்களும் சாகசம் செய்ய வேண்டும் என்றால் எந்த மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அபுல்ஹசன்: இது கடினமான காரியம் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் உடல் திறன் இருக்கும். திறமையை வைத்தே அவர்களின் குறிக்கோள் இருக்கும். அதன் அடிப்படையிலேயே இதை வேகமாகவோ தாமதமாகவோ கற்றுக்கொள்ள முடியும். ஆனால், அவரவர் முயற்சிக்கு ஏற்ப கற்றுக்கொள்ளலாம். சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இரவு நீண்ட நேரம் விழித்திருக்க மாட்டேன். 8:30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழுக்க முழுக்க உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், வாழ்க்கை முறையை சரியாக வைத்திருப்பேன். மற்றவர்களுக்கும் அதைதான் அறிவுறுத்துகிறேன்.
கேள்வி: இது தொடர்பான போட்டிகளில் பங்கேற்று இருக்கிறீர்களா? விருதுகள் ஏதேனும் பெற்றது உண்டா?
அபுல்ஹசன்: எனக்கு போட்டிகள் நடைபெறுவது எதுவுமே தெரியாது. தெரிந்தால் அவசியம் கலந்துகொள்வேன். யாராவது எனக்கு ஊக்கமளித்தால் நிச்சயம் சாதிப்பேன். ஊரில் யாராவது ஒருவர் சிறப்பாக உடற்பயிற்சி, சாகசங்கள் செய்தால் அவர்களோடு போட்டிபோட்டு அவர்களை விட அதிகம் செய்ய வேண்டும் என பயிற்சி செய்வேன்." என்றார்.
அபுல் ஹசன் போன்ற பல திறமையாளர்கள் நமது தமிழ்நாட்டின் பல ஊர்களில், கிராமங்களில் முகம் தெரியாமல், வழிகாட்டுதல் இல்லாமல் முடங்கி கிடக்கிறார்கள். அதுபோன்றவர்களுக்கு அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைக்கும் தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இதுபோன்ற திறமையாளர்களை கண்டறிந்து முறையான பயிற்சியளித்தால் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டியில் பதக்கங்களை நம்மால் வாரிக்குவிக்க முடியும்.