ஓபிஎஸ் நிதானமாக பேசுவார்...சசிகலா பற்றி சரியாகத்தான் சொல்லியிருக்கார் - டிடிவி தினகரன் சப்போர்ட்
: ஓ.பன்னீர் செல்வம் எப்பவுமே யோசித்துதான் பேசுவார். சசிகலா பற்றி அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எப்போதும் நிதானமாக பேசும் ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். அதிமுகவில் இணைய பல முயற்சிகள் மேற்கொண்ட சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார் சசிகலா.
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு சசிகலா, அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடையவே தனது முடிவை மாற்றிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் சசிகலா.

அரசியல் பயணம்
கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா தனது பாரத்தை இறக்கி வைத்து விட்டதாக கூறினார். அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஏற்றிவைத்த சசிகலா, சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க சசிகலா புறப்பட்டுள்ளார். ஒரு வாரம் அரசியல் சுற்றுப்பயணத்தில் மதுரை,தஞ்சாவூர், ராமநாதபுரம் என சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

தொண்டர்களுடன் சந்திப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் சசிகலா அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சிலரை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்க்கும் இபிஎஸ்
அதிமுகவில் என்றைக்குமே சசிகலாவிற்கு இடமில்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கூறி வருகின்றனர். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியிருந்தார். இதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்றும் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் கருத்து
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் கூறிய கருத்து அதிமுகவினரிடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

டிடிவி தினகரன் சப்போர்ட்
இந்த நிலையில் மருதுசகோதரர்கள் குருபூஜை தினமான இன்று தஞ்சாவூரில் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரனிடம் ஓபிஎஸ் கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எப்போதும் நிதானமாக பேசும் ஓபிஎஸ் சசிகலா பற்றியும் சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

மருது சகோதரர்கள் விசுவாசமானவர்கள்
இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், மருது சகோதரர்கள் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். விசுவாசமான ஓபிஎஸ் உடன் கூட்டணி சேர்ந்து அதிமுகவை மீட்போம் என்று சூசகமாக கூறியுள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications