பெற்றோருடன் பெண்ணை அனுப்பி வைத்த அடுத்த நாளே.. ஆணவக்கொலை! உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
தஞ்சாவூர்: சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது காதல் கணவரிடமிருந்து பிரித்து பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், இவரது மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரின் மகன் நவீன் (19). இருவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கின்றனர். அப்போதே இந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. எனவே, நவீனின் வீடு தேடி சென்று பெருமாள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காரணம் நவீன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதுதான்.

பள்ளிப்படிப்பு முடிந்ததையடுத்து ஐஸ்வரியா திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். நவீனும், திருப்பூரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் நடந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. எனவே அவர்கள் ஐஸ்வரியாவை தேட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தை முன்னரே தெரிந்துகொண்ட காதல் ஜோடி வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
மறுபுறம் பெற்ரோர் புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினரும் காதல் ஜோடிகளை தேடி வந்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்த அவர்கள், ஐஸ்வரியாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு காத்திருந்த பெற்றோர், ஐஸ்வரியாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதன் பின்னர்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, இவர்கள் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாள் ஐஸ்வரியா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது, அவரது சடலத்தை பெற்றோர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராயிரம் ஆண்டுகள் பழமையான, தொன்மை வாய்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் சமூகத்தில் சாதிய ஆணவக்கொலைக்கு முடிவு எப்போது? என சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக நவீன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரில், ஐஸ்வரியா ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் ஐஸ்வரியாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஐஸ்வரியாவின் பெற்றோருக்கு உடந்தையாக செயல்பட்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications