தஞ்சாவூரில் வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தந்தால் ரூ.20000 பரிசு.. போஸ்டர் ஒட்டிய பெண்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டி உள்ளார் விஜயலட்சுமி என்ற பெண். இந்த போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மனிதர்களை விட நாய்கள் மீது அதிக பாசம் வைக்கும் காலம் இது. நண்பர்களுடன் நடைபயிற்சிக்கு போனவர்கள், செல்லமாக வளர்த்த பிராணிகளை கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எண்ணவே முடியாத அளவிற்கு இருக்கிறார்கள்.

நாய்கள் தான் உலகம் என்கிற அளவிலும் சிலர் இருக்கிறார்கள். நாய்கள் நன்றியுள்ள பிராணி என்பதுடன், தன் எஜமானர்களுக்காக எதையும் செய்ய துணியும். அவர்கள் மீது அன்பை பொழிந்து திக்குமுக்காட செய்யும்.. இதனாலேயே நாய்களை பலருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த நாய்கள் ஒருவேளை இறந்து போனாலோ அல்லது காணாமல் போனாலோ அவர்களது எஜமானர்களால் தாங்கி கொள்ளவே முடியாது. அவர்களையே நினைத்து தவிப்பார்கள். அப்படித்தான் தஞ்சாவூரில் ஒரு பெண் தவித்து வந்துள்ளார். அவர் செய்த செயல் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
தஞ்சை அசோக் நகர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு சிம்பா என பெயர் சூட்டி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் சிம்பா கடந்த மே 23-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் நாய் கிடைக்கவே இலலை.
இதனால் தனது வளர்ப்பு நாய் மாயமாகி விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகாரும் அளித்தார். ஆனால் இதுவரை நாய் கண்டுபிடிக்கப்படவில்லை. நாய் எங்கு உள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை..
இதற்கிடையில் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் நாய் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில்," படத்தில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த மாதம் 23-ந் தேதி முதல் காணவில்லை. நாயின் பெயர் சிம்பா, கோல்டன் ரெட்ரீவர் வகையை சார்ந்தது. வெள்ளை நிறமுடைய 2 வயதுடைய நாய். இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. அதில் செல்போன் எண்ணுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
நாய் குட்டியாக இருந்தபோது வாங்கி வந்து கடந்த 2 வருடங்களாக வளர்த்து வந்த விஜயலட்சுமிக்கு, சிம்பா நாய் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்துள்ளது. அது காணாமல் போனது முதல் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சுவரொட்டி ஒட்டி உள்ளாராம். ஆனால் இன்று வரை நாய் கிடைக்கவில்லை. இதனால் கவலையில் இருக்கிறார் விஜயலட்சுமி.












Click it and Unblock the Notifications