கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்!
தஞ்சை: கருணாநிதி பிறந்தநாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் ஆரூடம் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தஞ்சையில் உதயநிதி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் நான் பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்கிறார்கள். ஆனால் இது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை.
அடுத்து நம்ம ஆட்சிதான்.. திடீர் உற்சாகத்தில் திமுக!
கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது தமிழகத்துக்கு மோடி வரவில்லை. ஆனால் தற்போது தேர்தல் என்றவுடன் வந்து செல்கிறார். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் தருவதாக சொன்னார் மோடி.
ஆனால் ஒருவருக்கு கூட தரவில்லை. வரும் 18-ஆம் தேதி திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது ஏன். எல்லாம் மோடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால்தான்.
5 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டனர். மக்கள் வாக்களித்து எடப்பாடியை தேர்வு செய்யவில்லை. சசிகலாவின் காலை பிடித்துதான் அவர் முதல்வரானார். எனவே அவர் மக்கள் முதல்வர் இல்லை.
22 சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். கருணாநிதி பிறந்தநாளான வரும் ஜூன் 3-ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.