என்னையும் வெட்ட வந்தாங்க.. அப்பாதான் எட்டி உதைத்து காப்பாற்றினார்.. ராமலிங்கம் மகன் கண்ணீர்
கொலையுண்ட பாமக பிரமுகர் மகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
கும்பகோணம்: "என்னை அரிவாளால வெட்ட வந்தாங்க... ஆனா ரத்த வெள்ளத்தில் கிடந்த எங்கப்பா காலால எட்டி உதைச்சி அதை தடுத்துட்டார்" என்று உயிரிழந்த பாமக பிரமுகர் ராமலிங்கத்தின் ஷாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவரை 2 பேர் கட்டாய மத மாற்றம் குறித்து பேசியுள்ளனர். இதற்கு ராமலிங்கம் மறுப்பு தெரிவிக்கவும், தகராறாக மாறியது. ஆனால் அங்கிருந்தோர் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ராமலிங்கம் தனது கடையை பூட்டிவிட்டு தனது மூத்த மகன் ஷாம் சுந்தருடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஷாம் சுந்தருக்கு வயது 17.
கண்டனம்
அப்போது ஆயுதங்களுடன் நின்ற கும்பல் ராமலிங்கத்தை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தம் வழிய விழுந்தாரு
இந்நிலையில், உயிரிழந்த ராமலிங்கத்தின் மகன் ஷாம் சுந்தர் அன்றிரவு நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "நான் என் அப்பாவுடன் ஆட்டோவில் போய் கொண்டிருந்தேன். 4 கையில் அரிவாளை வெச்சிக்கிட்டு இருந்தாங்க. என் அப்பாவோட ரெண்டு கையிலயும் வெட்டினாங்க. இதில அப்பா ரத்தம் வழிய கீழே விழுந்துட்டாரு.
ஆஸ்பத்திரி
நான் அவங்களை தடுக்க போனேன். அதனால என்னையும் வெட்ட வந்தாங்க. ஆனால் உயிருக்கு போராடிக்கிட்ட எங்க அப்பா அவங்கள காலாலேயே எட்டி உதைச்சு விரட்டி விட்டுட்டாரு. அங்கிருந்து எங்க அப்பாவை சுபா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன்.
காப்பாத்த முடியல
ஆனா அங்க இருந்த வாட்ச்மேன் உட்பட யாருமே ஓடிவந்து தூக்ககூட வரல. அதுக்கப்பறம் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏத்தி ஜி.எச்.-க்கு அப்பாவை கூட்டிட்டு போனோம். ஆனா அங்கியும் சரியா கவனிக்கல. உடனே தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஆனாலும் அப்பாவை காப்பாத்த முடியல" என்றார்.