அங்கன்வாடி இடத்தை தனி நபருக்கு பட்டா போட்ட விஏஓ.. தலையாரியுடன் சிக்கி.. தஞ்சையே திகைச்சிடுச்சு!
தஞ்சை: தஞ்சையில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி செயல்பட்டு வந்த இடத்தை, முறைகேடாக தனிநபருக்கு சிட்டா, அடங்கல் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவரையும் வருவாய் கோட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக தனிநபருக்கு சிட்டா, அடங்கல் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் சிக்கியுள்ளனர். இருவரும் தற்போது சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா இடையாத்தி வடக்கு கிராமத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில், புல எண் 67/9ஏ-ல், அரசு அங்கன்வாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் 2 மாதங்களுக்கு முன்பு கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கன் வாடி கட்டிடம் தற்போது அருகில் உள்ள வாடகை பில்டிங்கில் செயல்பட்டு வருகிறது.
பழைய அங்கன்வாடி மையம் இருந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கட்டிடம் கட்டும் பணிகள் துவங்க இருந்த நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த தனிநபரின் பெயருக்கு விஏஒ செல்வராஜ் மற்றும் தலையாரி (கிராம உதவியாளர்) அன்பழகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, முறைகேடாக சிட்டா, அடங்கல் கொடுத்தனர்.
மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில்.. டிக்கெட் எவ்வளவு? நின்று செல்லும் இடங்கள் எவை? முழு விவரம்
இதனை பெற்றுக்கொண்ட அந்த நபர், தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான விவரம் வெளிவந்ததும் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் கிராம மக்கள் சார்பில் முறைகேடாக அரசு கட்டிடத்தை பட்டா மாற்றம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கலெக்டரிடம் சமீபத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், விஏஓ செல்வராஜ் மற்றும் தலையாரி அன்பழகன் ஆகியோர் முறைகேடாக அரசு கட்டிடத்திற்கு தனி நபருக்கு சிட்டா, அடங்கல் வழங்கியது உறுதியானது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
ஏழை எளிய மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆவணங்களை பெற அரசு அலுவலகங்களுக்கு சென்றால், லஞ்சம் கேட்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. நேர்மையான அதிகாரிகள் பலர் இருந்தாலும் ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் தொடர் கதையாகத்தான் உள்ளது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அவ்வப்போது கையும் களவுமாக சிக்கியும் வருகிறார்கள்.
ஆனாலும், இந்த லஞ்சம் வாங்கும் படலங்கள் நீடித்து கொண்டுதான் உள்ளது. கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், நகராட்சி அதிகாரி, மாநகராட்சி அதிகாரி என பலர் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கி வருகிறார்கள். பட்டா பெயர் மாற்றம் செய்ய, சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது, வாரிசு சான்றிதழ் பெற என பல்வேறு விஷயங்களுக்கான லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள்.
இத்தகைய லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், லஞ்சம் வாங்குவதும் தவறு... கொடுப்பதும் தவறு என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications