தேனி நந்தினியும்.. 2வது காதலன் பிரபாகரனும்.. அதிர்ந்த கம்பம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த கணவனை இழந்த நந்தினி என்ற பெண்ணுக்கும், சதீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ஆனால் ஒரு கட்டத்தில் நந்தினிக்கு பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சதீஷ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி, தனது இரண்டாவது காதலன் பிரபாகரனுடன் சேர்ந்து முதல் காதலனை தீர்த்துக்கட்டினார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவை சேர்ந்த முதல்வன் என்பவரின் மனைவி நந்தினி (32) தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.முதல்வன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் நந்தினிக்கும், சுருளிவேல் என்பவருடைய மகன் சதீஷ் (வயது 23) என்பவருக்கும் ( திருமணம் ஆகாதவர்) இடையே பழக்கம் ஏற்பட்டது. நந்தினி வீட்டுக்கு சதீஷ் அடிக்கடி சென்று வந்தார். இதை அறிந்த சதீசின் குடும்பத்தினர் அவரை கண்டித்து வந்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் நந்தினி கம்பம் மஞ்சக்குளம் சாலையில் உள்ள குடத்துக்காரர் தெருவில் குடியேறினார். அங்கும் சதீஷ் அடிக்கடி சென்று தனது பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். இதற்கிடையே நந்தினிக்கும், கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய மகன் பிரபாகரன் (26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் சதீஷ்க்கு தெரியவந்துள்ளது. நந்தினியை அவர் கடுமையாக கண்டித்தாராம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி இரவில் நந்தினி, சதீசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளாராம். சதீஷ் தனது மாமா துரை என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நந்தினி வீட்டுக்கு சென்றார். துரையை தெருப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நிற்க சொல்லிவிட்டு அவர் மட்டும் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த நந்தினி, பிரபாகரனையும் அங்கு அழைத்தார். சதீஷ் தன்னை வீடு தேடி வந்து அடிக்கடி சத்தம் போடுவதால் நம்மை சந்தோஷமாக இருக்க விடமாட்டான். எனவே அவரை கொலை செய்யுமாறு பிரபாகரனிடம் தெரிவித்தாராம்.
உடனே, பிரபாகரன் அந்த பகுதியில் கீழே கிடந்த உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து, சதீசின் மார்பு, வயிறு உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு துரை மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி அவர் உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து சதீசின் அக்காள் காளீஸ்வரி, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், நந்தினி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்..
பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார். இதேபோல் நந்தினிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து பிரபாகரன், நந்தினி ஆகிய 2 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications