ஜெயலலிதா இருந்த வரை 'தேனி' திமுகவால் கனவிலும் நெருங்க முடியாத கோட்டை.. இன்று பரிதாப நிலை
தேனி: எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் தேனி தொகுதியை பொறுத்தவரை திமுகவால் கனவிலும் நெருங்க முடியாத கோட்டையாக இருந்தது. திமுக கடந்த 28 வருடங்களாக வெற்றி பெற ஏங்கி தொகுதி என்றால் தேனி லோக்சபா தொகுதிதான் . இப்போது முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை மூன்று பக்கமும் அரண் போல் அமைத்து அமைந்துள்ள தேனி லோக்சபா தொகுதி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான் திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றிருந்தது.

இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும். சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த தொகுதிகளின் சட்டசபை வரலாறு மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தல் வரலாறுகளுமே அதிமுகவிற்கே பெரும்பாலும் சாதகமாக இருந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவின் கோட்டையாக இருந்தது தேனி மாவட்டம். இங்கு வெற்றிபெற பல ஆண்டுகளாக திமுக போராடி வந்தது. ஆனால் அதிமுக மிகவும் பலவீனமாக இருந்த 1996ல்தான் சாத்தியமானது. 2004, 2014ல் தேனியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வென்றாலும், சட்டசபை வரலாறு அப்படியே வேறுமாதிரி தான் இருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அப்படியே மாறியது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் போடி தொகுதியை தவிர வேறு எங்குமே அதிமுக வெற்றி பெறவில்லை.. அங்குமே கடும் போட்டி இருந்தது. இந்த சூழலில் தேனிலோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தங்கத் தமிழ்செல்வனும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும் களம் இறங்கிய போதே, அதிமுக கடும் சவாலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே நடந்துள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கிய தங்க தமிழ்செல்வன், டிடிவியை விட 279386 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக சார்பில் நாராயணசாமி 154871 வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் 3வதுஇடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications