கட்சி மீட்டிங்கில் கனெக்சன்.. கள்ள உறவில் அதிமுக செயலாளர்.. தட்டிக் கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து!
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி, தட்டிக்கேட்ட மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தீவிர ஓபிஎஸ் ஆதரவாளரான இவர், தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பிச்சைக்கனி. அதிமுக நகர செயலாளராக இருக்கிறார். அவர் வீட்டிலேயே கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அவரது வலது கரம் போலவே செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி அணிக்கு தாவினர். தொடர்ந்து அதிமுக தேனி நகர செயலாளர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் பிச்சை கனிக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே உட்கட்சி பூசல் இருந்து வந்தது.

இதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நள்ளிரவு பிச்சைக்கனியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு அந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிச்சைக்கனி. பிச்சைக்கனி மகாலட்சுமி என்பவருடன் திருமணம் ஆகி 12 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைகனி கம்பம் கக்கன் காலனியில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று கம்பம் கக்கன் காலனிக்கு தனது கணவரை தேடி வந்த மகாலட்சுமி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை கைவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த பிச்சைகனி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை கையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. காயம்பட்ட மகாலட்சுமிக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
இதனை அடுத்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிச்சைக்கனியையும் அவருடன் இருந்த பெண்ணையும் வலை வீசி தேடி வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது," அதிமுக நகர செயலாளரான பிச்சைக்கனி கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தனது சொந்த வீட்டுக்கு வராமல் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.
கணவன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி விசாரித்த போது தான் அந்த பெண்ணுக்கும் பிச்சை கனிக்கும் முறையற்ற உறவு இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து பலமுறை அவரை தொடர்பு கொண்டு பேசியபோதும் தன்னால் வீட்டிற்கு வர முடியாது என பிச்சைக்கனி மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பிச்சைக்கனியின் மனைவி வீட்டுக்கு வரவேண்டும் என கணவரை அழைத்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணும் பிச்சைக்கனியும் சேர்ந்து அவரது மனைவியை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதை அடுத்து பிச்சைக்கனியின் மனைவி உறவினர்களிடம் அழைத்துப் பேச முயன்ற போது தான் ஆத்திரத்தில் பிச்சைக்கனி கத்திரிக்கோலால் அவரை குத்தி இருக்கிறார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிச்சைக்கனி மற்றும் அந்த பெண் தலைமறைவாகி உள்ளனர் கைது செய்ய தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து எங்கு இருக்கிறார் என விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" எனக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications