திருச்சியில் மார்ச் 14ல் திமுக மாநாடு... மு.க ஸ்டாலின் அறிவிப்பு - திருப்பு முனை ஏற்படுமா?
திருச்சியில் திமுக மாநாடு மார்ச் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று தேனியில் வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். இந்த மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.
தேனி: திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 11வது மாநில மாநாடு மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் மட்டுமே மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்கட்சி என இரு கட்சியினரும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று பிரச்சார பயணத்தை தொடங்கி மனுக்களை பெற்று வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். ஆறு கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டார் முதல்வர் பழனிச்சாமி.
திமுக, அதிமுக
முதன் முறையாக ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க.வும், கருணாநிதி இல்லாமல் தி.மு.க.வும் தேர்தலை சந்திக்கிறது. வழக்கத்தைவிட இந்த சட்டசபைத் தேர்தல் அரசியல் நோக்கர்கள் மற்றும் பொதுமக்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திருச்சி மாநாடு
சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பில் பிரமாண்ட மாநில மாநாட்டினை நடத்த அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
திருச்சியும் திமுக மாநாடும்
கடந்த 1949ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டது. திமுகவின் முதல் மாநாடு 1951ஆம் ஆண்டு சென்னையில் நடந்தது. அப்போது தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்காத இயக்கமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான், சட்டசபைத் தேர்தலில் திமுக போட்டியிடலாமா, வேண்டாமா? என்பது குறித்து வாக்கெடுப்பை அண்ணா நடத்தினார். திருச்சி மாநாட்டில்தான் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
திமுக உறுப்பினர்கள்
1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன் முறையாக தி.மு.க. போட்டியிட்டது. அந்த தேர்தலில் 15 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க. போட்டியிட்டு, 50 இடங்களை கைப்பற்றியது.
1967ல் திமுக வெற்றி
1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் 179 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருந்தது. அண்ணா மறைவுக்கு பின்னர் மீண்டும் 1970ஆம் தி.மு.க. தலைவர் கருணாநிதி திருச்சியில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, ஆதிக்கமற்ற சமுதாயம் போன்ற ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார்.
திருச்சி மாநாடுகள்
அதன்பிறகு 1990, 1996, 2006, 2014-ம் ஆண்டுகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடந்துள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை திருச்சியில் மாநாடு நடந்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. பிரதிநிதிகள் மாநாடும் திருச்சியில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
மார்ச் 14ல் 11வது மாநாடு
இதுவரை நடந்த தி.மு.க.வின் 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடந்துள்ளன. தற்போது 11வது தி.மு.க. மாநில மாநாட்டினை திருச்சி சிறுகானூரில் நடைபெறுகிறது. மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் இந்த முறை ஒரு நாள் மட்டுமே மாநாடு நடைபெற உள்ளது. திமுக மாநாடு மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார் கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்.
மாநாட்டிற்கு அழைப்பு
தேனியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரப் பயணக் கூட்டத்தில் பேசும் போது, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக மாநாடு, மார்ச் மாதம் 14ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று கூறினார். ஒவ்வொருவரும் வந்து மாநாட்டில் பங்கேற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதை உங்கள் வருகையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆளுங்கட்சியாகுமா திமுக
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சட்டசபையில் திமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. ஆளுங்கட்சியாக அமரவேண்டும் மு.க ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு முடிவு செய்யும்.