குழி பறித்த அண்ணி.. ஏமாந்த கொழுந்தன்.. தேனியில் முன்னாள் எம்எல்ஏ மகன் அதிரடியாக கைது
தேனி: ஹைதராபாத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளவருக்கு பஞ்சமி நிலத்தை விற்று மோசடி செய்ததுடன், பெட்ரோல் பங்க் பார்ட்னராக முதலீடு செய்தால் கமிஷன் தருவதாகவும் மோசடி செய்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் தேனி முன்னாள் எம்.எல்.ஏ மகனை போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஹைதராபாத் வி.வி.நகரில் வசித்து வரும் 37 வயதாகும் ஸ்ரீகாந்த் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவர் ஹைதராபாத் நகரில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

ஸ்ரீகாந்த் ஹைதராபாத்தில் சம்பாதித்த பணத்தை தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் முதலீடு செய்து சொத்துக்கள் வாங்க விரும்பி உள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது அண்ணன் மனைவி வித்யாஸ்ரீ மற்றும் அவரது சகோதரிகள் சாமுண்டீஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ ஆகியோர் மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் 1 ஏக்கர் புஞ்சை நிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது அண்ணன் மனைவி வித்யாஸ்ரீயை, ஒரு ஏக்கர் நிலத்தை 60 லட்சத்திற்கு விலை பேசி கடந்த 2017ஆம் ஆண்டு இரு தவணைகளாக வித்யாஸ்ரீ-யின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
அதன்பின்னர் மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கிரைய பத்திரம் தயார் செய்து அதனை தேனி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த நிலம் பஞ்சமி நிலம் என்பது அவருக்கு தெரியவில்லை.
இது ஒரு புறம் எனில் ஸ்ரீகாந்த்தை தொடர்பு கொண்ட அவரது அண்ணன் மனைவி வித்யாஸ்ரீ மற்றும் அவரது சகோதரிகள் சாமுண்டீஸ்வரி, ராஜஸ்ரீ, ஆகியோர் தேனி அருகே உள்ள உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தொழிலதிபராக இருப்பதாகவும், அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்-ல் பார்ட்னராக சேர்ந்தால் மாத மாதம் கமிஷன் தருவதாக கூறி இருக்கிறார்கள்.
அதனையும் உண்மை என நம்பிய ஸ்ரீகாந்த் கடந்த 2018ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் வரையில் அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த முதலீட்டுக்கு மாதம் 3,80,000 ஆயிரம் ரூபாய் கமிசன் தருவதாக கூறி விட்டு பல மாதங்களில் பல்வேறு தவணைகளாக பங்குத் தொகை என்று 60 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு முதல் எந்தவித கமிஷன் தொகையையும் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகம் அடைந்த ஸ்ரீகாந்த், ஹைதராபாத்-ல் இருந்து நேரில் வந்து தேனி மாவட்டம் உப்பார்பட்டியில் பார்த்திருக்கிறார்.
ஆனால் அவர்கள் கூறியது போல எந்தவித பெட்ரோல் பங்க்கும் செயல்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் புஞ்சை நிலம் என தங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 1 ஏக்கர் இடமும் பஞ்சமி நிலம் எனத் தெரிந்ததால் பேரதிர்ச்சி அடைந்தார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீகாந்த், மோசடி பணம் ரூபாய் 2 கோடியே 20 லட்சத்தை திருப்பி தரும் படி அண்ணன் மனைவி வித்யாஸ்ரீ மற்றும் ஞானராஜன் உள்ளிட்டோரிடம் கேட்டும் தர மறுத்ததால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்
அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று வித்யாஸ்ரீ, ஞானராஜன், சாமுண்டீஸ்வரி, ராஜஸ்ரீ, சுஜய் ராமலிங்கம், கண்ணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்
இந்நிலையில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு தொடர்பாக ஞானராஜன் என்பவரை தற்போது கைது செய்துள்ளனர். கைதாகியுள்ள ஞானராஜன் முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் பொண்ணுப்பிள்ளை என்பவரின் மகன் ஆவார். கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொண்ணுப்பிள்ளை, திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார். பொண்ணுப்பிள்ளை தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கிறார். மோசடி வழக்கில் தேனி முன்னாள் எம்எல்ஏ மகன் கைதாகி இருப்பது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications