தேனி அருகே காதல் கணவன் திடீரென தலைமறைவு.. மனஉளைச்சலில் இளம் பெண் விபரீத முடிவு
தேனி: காதலித்து மணமுடித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து மணமகன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை யில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனிமாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரின் 19 வயது மகள் ஹேமலதா. ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெங்களூர் இஸ்ரோ மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான மணிவாசகத்தின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதையடுத்து ஹேமலதாவிற்கும் சந்துருவிற்கும் காதல் மலர்ந்து காதலர்கள் கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில், பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டி மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் காதலர்கள் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மணமகளுக்கு 19 வயது ஆனாலும் மணமகனுக்கு 20 வயதே ஆகியிருந்தது. மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடையாத காரணத்தால், புதுமண தம்பதிகள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என்றும் மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்
இதனிடையே சந்துருவின் பெற்றோர்கள் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் செய்ததை அடுத்து போலீசார் சந்துருவை தேடி வந்தனர். கணவனைக் காணாமல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா போடி அருகே உள்ள சிந்தலைச்சேரியில் உள்ள தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கோம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹேமலதா உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு, தலைமறைவான சந்துருவையும் அவரைக் கூட்டிச்சென்று பெங்களூரில் மறைத்து வைத்துள்ள இஸ்ரோவில் பணிபுரையும் அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஹேமலதாவின் குடும்பத்தினர் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஹேமலதாவின் உடலை வாங்காமல் உறவினர்கள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications