700 கிராம் எடையுடன் பிறந்து.. இறந்ததாக கூறி.. மயானத்தில் மீட்கப்பட்ட சிசு.. பரிதாப மரணம்!
தேனி: தேனியில் இறந்ததாக கூறப்பட்ட பிஞ்சு குழந்தை மயானத்தில் உயிர் பிழைத்த நிலையில் அக்குழந்தை மருத்துவமனையில் இறந்த சம்பவம் மனதை உலுக்கியது.
தேனி மாவட்டம், தாமரைக்குளத்தை சேர்ந்த பாத்திமாமேரி. 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்துவிட்டது.
இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 700 கிராம் மட்டுமே இருந்தது.

சுவாச பிரச்சினை
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டதாகவும், பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலை பெற்றோரிடம் ஒரு வாளியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைக்கு சடங்கு
இதையடுத்து குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து விட்டு அக்குழந்தையை மயானத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே குழி தோண்டப்பட்டிருந்தது. அப்போது குழந்தையை தூக்கி குழியில் வைக்க முயன்றபோது உடலில் அசைவு இருந்தது.

உடலில் அசைவு
இதனால் குழந்தை உயிருடன் இருப்பதை அடுத்து மகிழ்ச்சி அடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக மீண்டும் தேனி மருத்துவமனையில் சேர்த்து வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறந்த குழந்தை
எனினும் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. இதையடுத்து குழந்தை இறந்ததாகக் கூறி அலட்சிய போக்கில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications