சர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் மறைப்பு!
தேனி: சர்ச்சையை ஏற்படுத்திய குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து மே 23-ம் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு!
எம்பி ரவீந்திரநாத்
அதன்பிறகுதான் எந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றது? யார் தோல்வியடைந்தது? யார் எம்பி? என்பது குறித்தெல்லாம் தெரியவரும். ஆனால் அதற்குள்ளேயே தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
கோயில் கல்வெட்டு
தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி ஆலயத்துக்கு நன்கொடை அளித்ததாக அமைக்கப்பட்ட கல்வெட்டில் கடந்த 16-ம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று பொறிக்கப்பட்டிருந்தது.
பெரும் சர்ச்சை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் கல்வெட்டில் ரவீந்திரநாத் பெயருக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதிவிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பெயர் மறைப்பு
எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொறிக்கப்பட்ட கல்வெட்டு மீது மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.