தமிழக அரசு தரும் கடன் உதவி.. தேனி மாவட்டத்தில் வசிப்போருக்கு நல்ல செய்தி.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) சார்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு கடனுதவி வழங்கும் முகாம், தேனி மாவட்டத்தில் நாளை 7 இடங்களில் நடைபெற உள்ளது . கடன் பெற விரும்புபவர்கள் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி உள்பட ஏழு இடங்களில் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தேனி கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் உதவி, சிறுதொழில் கடன்,கல்விக்கடன் உள்பட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. குறைந்த வட்டியில் வழங்கப்படும் இந்த கடன் உதவிக்கு மானியமும் உண்டு. இந்த கடனை பயன்படுத்தி தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பலர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன் பெற கடன் வழங்கும் முகாம்கள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 7 இடங்களில் நடக்கிறது.
அல்லிநகரத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், போடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகிய 7 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.
எனவே கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று, தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, கல்விக்கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications