மாப்பிள்ளை வயது 24.. பெண்ணுக்கு 10.. பாட்டி வீட்டில் திருமணம்.. மீண்டும் தேனியில் ஷாக்.. தீர்வு என்ன
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது
தேனி: 10 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி உள்ளார் பெற்ற தந்தை.. இதையறிந்த அதிகாரிகள் தந்தை உட்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்... நாளுக்கு நாள் தமிழகத்தில் இப்போது குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு என்னதான் தீர்வு?
தேனி மாவட்டம் கூடலூர் காஞ்சிமரத்துறை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு, திருமணம் நடத்தப்பட்டதாக குழந்தைகள் நல அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர், குறிப்பிட்ட அந்த பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.. அங்கிருந்தோரிடம் விசாரணையும் நடத்தினர்.
உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம்
வீட்டில் திருமணம்
அப்போதுதான், கடந்த வருடம் டிசம்பர் மாதமே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.. சிறுமியின் தந்தை வழி உறவினர் விஜய் என்பவர்தான் மாப்பிள்ளை.. அவருக்கு 24 வயதாகிறது.. உறவினர் என்பதால், பாட்டி வீட்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.. பாட்டி வீட்டில்தான் சிறுமியுடன் அந்த இளைஞர் குடியிருந்து வருகிறார்.
2 பேர் கைது
இதையடுத்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியம்மாள் கூடலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்... அதன்பேரில் குழந்தைத் திருமண தடைசட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துறையினர் சிறுமியின் தந்தை முருகன் மற்றும் திருமணம் செய்த மாப்பிள்ளை விஜய் ஆகியோரை கைது செய்தனர்... 2 பேரையும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்... மேலும், இந்த திருமணத்துக்கு உதவி செய்ததுடன், திருமணத்தையே நடத்தி வைத்த உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவலை
இறுதியில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட குழந்தைகள் நலகுழுவினர் மற்றும் காவல்துறையினர் சிறுமிக்கு ஆலோசனை வழங்கினர்.. இறுதியில் குழந்தைகள் நலக் குழுவினரிடம் அச்சிறுமி ஒப்படைக்கப்படுகிறார்.. சமீப காலமாகவே குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் அதிகமாகி கொண்டே வருகிறது.. அரசு எத்தனையோ விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தொடர்ந்து இது போன்ற குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டிருப்பது மக்களுக்கு கவலையை தந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு
இதே தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஒரே நாளில் நடக்கவிருந்த 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.. 15 மற்றும் 16 வயதுடைய அந்த 3 சிறுமிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் குறித்து தகவல் அறிந்ததுமே, மாவட்ட குழந்தைகள் நல குழு விரைந்து சென்று சிறுமிகளை மீட்டு தொண்டு நிறுவன காப்பகத்திற்கும் அவர்களை அனுப்பி வைத்தது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் மே 30 தேதி வரை கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் 49 குழந்தை திருமணங்கள் கடைசி நேரத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.
தடுத்து நிறுத்தம்
குழந்தை திருமணங்களை தடுக்கவும், புகார் கொடுக்கவும் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098 எண்கள் உள்ளன.. இதுதவிர, குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டமும் நடை முறையில் இருந்து வருகிறது... இதைதவிர, குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்க சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது.. ஆனாலும், குழந்தை திருமணங்கள் அதிகரிக்க என்ன காரணங்கள் என்பதே கேள்வியாக எழுகிறது. கடந்த 2 வருடமாக இந்தியாவில் தொற்று அதிகமாகி லாக்டவுன் போடப்பட்ட சூழல் ஏற்பட்டது.. அதனால் குடும்ப வறுமை காரணமாக இத்தகைய திருமணங்கள் நிறைய நடப்பதாக சொல்கிறார்கள்.
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வு இல்லாதது, சிறுமிகள், இளைஞர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமை போன்றவைகள் கூட குழந்தை திருமணங்கள் நடக்க காரணியாக சொல்லப்படுகிறது.. எனவே, இவைகளை களையும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..
அறிவுறுத்தல்
அதில், "மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும்.. குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை போன்ற சமூக அவலங்களைக் களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இதுகுறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.."குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்திட வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.