தமிழ்நாட்டில் தொழில் அதிபர் ஆக ஆசையா.. 15 லட்சம் வரை அள்ளித்தரும் அரசு.. விண்ணப்பிக்க அழைப்பு
தேனி: சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் இந்த கடன் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையில் தமிழக அரசு உதவி வருகிறது. சிறு தொழில், வணிகம் செய்ய விரும்புவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையும், சுய உதவிகுழுவாக இதனை செய்திட விரும்புவோருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்டுகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனுதவி பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
கடனுதவி எப்படி: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன் திட்டத்தின்கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. குழுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
கறவை மாடுகள் வாங்க கடன்: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தேனி கலெக்டர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications